- வீர ரசேந்திரன்
- உடுமலை
- கோபாலபுரம் காடு
- கல்லாபுரம்
- உடுமலை வரலாற்று ஆராய்ச்சி மையம்
- வடகோங்கா
- டெங்கோங்கா
- சுவஸ்ரீ வீர ரசேந்திரன்…
உடுமலை : உடுமலை அருகேயுள்ள கல்லாபுரம் அடுத்த கோபாலபுரம் காட்டுப்பகுதியில் 12ம் நூற்றாண்டில் வடகொங்கு, தென்கொங்கு என இரண்டையும் ஆட்சி செய்த வீர ராசேந்திரன் கால கல்வெட்டு ஒன்றை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தினர்.
இந்தக் கல்வெட்டில் ‘ஸ்வஸ்ஸ்ரீ வீரராசேந்திர தெவற்கு யாண்டு மங்கலத்து மலையாட்டி சாத்தன் ஆப’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் முழுமையான கல்வெட்டு கிடைக்கவில்லை.
தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறுவதாவது: மேற்காண்ட கல்வெட்டு வீர ராசேந்திரன் என்றும் தேவற்கு என்றும் மங்கலத்து மலையாட்டி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில் நமது தென்கொங்கு நாட்டுப் பகுதி சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செய்தமைக்கான பல்வேறு கல்வெட்டுகள் ஆங்காங்கே கிடைத்துள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில் தான் இந்த கல்வெட்டும் அமைந்துள்ளது.
ஏற்கனவே உடுக்கம்பாளையம் பகுதியில் பாண்டியர் பெயர் பொறித்த கல்வெட்டும், கண்ணாடிப்புத்தூரின் பழைய பெயர் வீரபாண்டி சதுர்வேதி மங்கலம் எனும் பழங்காலப் பெயரும் பாண்டியர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக நாம் கொள்ளலாம். அதேபோல் பதிற்றுப்பத்தில் சேரன் செங்குட்டுவனின் கொடி வழி உறவுகள் இங்கு வந்து அயிரை மலையில் வழிபட்டமைக்கான இலக்கியச்சான்றுகளும் உள்ளது.
அதே போல் விக்கிரமசோழன் என்பவன் ஆட்சி செய்த மைக்கான சான்றுதான் இன்றைய கல்லாபுரம். ஆம், கல்லாபுரத்தில் பழைய பெயர் விக்கிரம சோழநல்லூர்.கி.பி.1206 முதல் 1250 வரைக்கும் வீரராசேந்திரன் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டில் ஏற்கனவே உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீர ராசேந்திரன் காலத்தைய கல்வெட்டு கிடைத்துள்ளது.
இப்போது கிடைத்திருக்கும் இந்த வீரராசேந்திரன் காலத்து கல்வெட்டு வீரராசேந்திரன் ஆட்சி மாண்பினையும். வடகொங்கு தென்கொங்கு என 2 கொங்கு நாட்டையும் ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக இதனைக் கருதலாம் என தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி கூறுகிறார்.ஆய்வுப்பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருள்செல்வன், சிவகுமார் மற்றும் வீரய்யன், தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெய்சிங் ஆகியோரும் ஈடுபட்டனர்.
