அட்டப்பாடி வனப்பகுதிக்குள் கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு

பாலக்காடு : அட்டப்பாடி வனப்பகுதிக்குள் 1,350 கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதை கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தீ வைத்து அழித்தனர். கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதிக்குள் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும், சில சமூக விரோதிகள் கஞ்சா பயிர் செய்து விற்பனை நடத்தி வருவதாகவும் மன்னார்காடு கலால் துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவர்களை பிடிக்க மன்னார்காடு கலால் துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பிரசாத், அகழி ரேஞ்சு உதவி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலையின் கிழக்கு பகுதியில் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 1,350 கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை வேருடன் பிடுங்கி தீ வைத்து எரித்து அழித்தனர்.

அங்கு கஞ்சா பயிரிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 17ம் தேதியும் கலால் துறை அதிகாரிகள் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு 1,700 கஞ்சா செடிகளை அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: