புதுடெல்லி: அதிமுக ஆட்சியின் போது காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் கடந்த 2021ம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையையும் நிறுத்தி வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,” இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதேப்போன்று மூன்று ஆண்டு சிறை தண்டனை என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, இந்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும், நிலவையில் உள்ள மறுஆய்வு மனுவை விரைந்து விசாரிப்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
