கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, அம்மாநிலத்தைச் சேர்ந்த பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி நேற்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர் மனுதாரராக மனுதாரர் சேர்த்துள்ளார். கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விவகாரத்தை குறிப்பிட்ட வழக்கறிஞர், மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரினார். தேர்தல் ஆணையம் முடிவுகளை எடுப்பதற்கு முன் மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்றங்களை கேள்விக்குள்ளாக்கும் இந்த மனு, அடுத்த வாரத் தொடக்கத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
