ரூ.364 கோடியில் தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்கள் மதுரையின் வளர்ச்சிக்கு உதவும் மேம்பாலங்கள்

* போக்குவரத்து நெரிசல் குறைந்தது

* பயணங்கள் எளிமையானது

* மக்கள் நெஞ்சார நன்றி தெரிவிப்பு

மதுரை : மதுரை மாநகரின் மைய பகுதிகளான கோரிப்பாளையம் மற்றும் மேலமடை சந்திப்புகளில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துள்ளதுடன், வாகன போக்குவரத்தும் எளிமையாகி உள்ளன.

இத்தகைய மேம்பாலங்களை வழங்கிய தமிழக அரசுக்கு மதுரை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக கோரிப்பாளையம் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

இதன்படி, தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டன. அதில், கோரிப்பாளையம் மற்றும் மேலமடை பகுதிகளில் முதற்கட்டமாக மேம்பாலங்கள் அமைத்தால் மாநகரின் மைய பகுதியிலும், தொண்டி சாலையிலிருந்து மாநகரின் கிழக்கு பகுதிக்குள் நுழையும் இடத்திலும் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகன போக்குவரத்து சீராகுமென தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு இடங்களிலும் மேம்பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு மேம்பாலங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023ம் ஆண்டு அக்.30ம் தேதி அடிக்கல் நாட்டினார். அதில், மதுரை- தொண்டி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அகற்றி ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க முடிவானது.

அதில், மேம்பாலம் 30 தூண்களுடன் 1,100 மீட்டர் நீளம், 17.2 மீட்டர் அலகத்துடன் நான்கு வழிச்சாலையுடன் அமைக்கவும் ஒட்டுமொத்த திட்டத்தையும் ரூ.150.28 கோடியில் முடிக்கவும் முடிவானது.

இதில், மேலமடை மேம்பாலம் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் சூட்டப்பட்டு பாலத்தின் முகப்பில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலையும் வைக்கப்பட்டு 2025ம் ஆண்டு டிச.7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடுத்தகட்டமாக, கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் சுமார் மொத்தம், 2 கி.மீ., நீளத்துக்கு மேம்பாலம் அமைக்க முடிவானது. அதில், தமுக்கம் பகுதியில் துவங்கும் பிரதான மேம்பாலத்தின் ஏறுதளம், கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து ஏவி மேம்பாலத்துடன் இணைந்து வைகை ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக 1.3 கி.மீ., நீளத்துடன் 12 மீட்டர் அகலத்தில் ஒரு திசை வழித்தட மேம்பாலமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதனுடன், கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்படும் பிரதான மேம்பாலத்தில் இருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 8.50 மீட்டர் அகலத்திற்கு 790 மீட்டர் நீளத்துடன் ஒரு வழித்திசையில் கட்டவும் முடிவானது.

மேலும், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுவதுடன் பாதசாரிகள் நடந்து செல்ல 1.50 மீட்டர் அகலம் நடை மேடையுடன் கூடிய மழைநீர் வடிகால் வாய்க்கால், தமுக்கம் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வரை ஏற்கனவே இருந்த பழைய பஸ் நிறுத்தங்கள் அகற்றப்பட்டு, புதிய பஸ் நிறுத்தங்கள் கட்டவும், பீ.பீ.குளம் – காந்தி மியூசியம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு அண்டர் பாஸ் அமைக்கவும் முடிவானது.

இதற்காக, ரூ.190.40 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், கோரிப்பாளையம் சந்திப்பில் அமெரிக்கன் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்களை அகற்றி, நில ஆர்ஜிதம் செய்வதில் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் திட்ட மதிப்பீட்டில் மாற்றம் ஏற்பட்டது. இதன்படி, திட்ட மதிப்பில் ரூ.23.40 கோடி உயர்ந்து ரூ.213.80 கோடியானது.

தொடர்ந்து, பணிகள் முடிக்கப்பட்டு சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயர் சூட்டப்பட்டு திட்டமிட்டபடி கடந்த பிப்.21ல் கோரிப்பாளையம் பிரதான பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பாலத்தின் செல்லூர் பகுதி இணைப்பு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இவற்றையும், வரும் மே மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக ரூ.364.08 கோடியில் இரண்டு சந்திப்புகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு இடங்களிலும் 20 ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்து, வாகன நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, நீண்ட நாட்களாக நெரிசலில் தவித்து வந்த வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பகுதி மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

மேலும், இரண்டு பாலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்து வரும் தமிழக முதல்வர் மதுரையின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் 2 புதிய மேம்பாலங்களை கொண்டு வந்துள்ளார். இத்தகையை தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்களை கொண்டு வந்த திமுக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: