எண்ணிக்கைக்கு 44 நாட்கள் உள்ள நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

*வேகம் காட்டும் தேர்தல் கமிஷன்

பெரம்பலூர் : பெரம்பலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் மார்ச் 30 முதல் தொடங்கப்பட உள்ளது.

மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் மனு ஏப்ரல் 7ம்தேதி பரிசீலனை செய்யப்படும். மனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் அறைகளுக்கான ஏற்பாடுகள் பெரம்பலூரில் மம்முரமாக நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய வருவோருக்கான இருக்கைகள், 360 டிகிரி கேமிரா பொருத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகள் மனு தாக்கல் செய்யப்படும் அறைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம்தேதி நடைபெற உள்ளது. இதற்காக பெரம்பலூரில் வாக்கு பதிவு மையங்களில், வாக்கு சாவடி அமைய உள்ள இடங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடம், வாக்காளர் பட்டியல், பாரங்கள் நிரம்புவது, விரலில் மை வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் பணியாளர்கள் அமரும் இடம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் அமரும் இடம் உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் உட்புறம் செய்ய வேண்டிய பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வாக்கு பதிவு மையங்களில் வாக்கு பதிவு மையத்திற்கான எண், வாக்கு சாவடிகளுக்கான எண் ஆகியவற்றை வரையும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வயதானவர்கள், மாற்று திறனாளிகள் எளிதில் வாக்கு சாவடி மையத்தை சென்றடையும் வண்ணம் சாய்தள பாதை, தேவையான இடங்களில் வெயிலுக்கு சாமியான பந்தல் அமைப்பது முதலிய ஏற்பாடுகளுக்கான ஆய்வுகளும், முன்னேற்பாடு பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டபேரவை தேர்தலுக்காக பதிவான வாக்குகள் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட, தேவையான திட்டமிடுதலும், அதற்கான ஏற்பாடுகளும் தற்போதே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் நேகா பன்சால், குன்னம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அமர் பகதூர் சிங் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான காவல் பார்வையாளர் அனூப் ஏ ஷெட்டி ஆகியோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, மாவட்டக் கலெக்டர் மிருணாளினி மற்றும் மாவட்ட எஸ்பி கோ.சி.அனிதா ஆகியோர் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் உள்ளிட்ட கருவிகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் முறையாக உள்ளதா என பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள், தபால் வாக்குகள் எண்ணும் அறைகள், ஊடகப் பிரிவினருக்கான அறை உள்ளிட்ட அனைத்து அறைகளையும் ஒவ்வொன்றாக பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் நாளன்று அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் எந்தெந்த வழிகளில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் ஆய்வு செய்தனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா(பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்), ஏடிஎஸ்பி பாலமுருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டாட்சியர்கள் சத்திய மூர்த்தி(பெரம்பலூர்), சின்னதுரை (குன்னம்) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: