துபாய்: ஈரான் மீதான் இஸ்ரேல், அமெரிக்க படைகளின் தாக்குதல் 3வது வாரத்தை எட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து வந்த 2 டிரோன்கள் நடத்திய தாக்குதலில் குவைத் எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்தது. ஒரு நாளைக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், பலத்த சேதம் அடைந்தது.
கடந்த புதன்கிழமையன்று பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் மிகப்பெரிய தெற்கு பார்ஸ் கடல் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் குண்டு வீசியதைத் தொடர்ந்து, வளைகுடா அரபு நாடுகளில் உள்ள எரிசக்தி தளங்கள் மீதான தனது தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் வருவதாக இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஜெருசலேமிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துபாய் நகரின் மீது ஈரானில் இருந்து வீசப்பட்ட ஆரம்பகட்டத் தாக்குதல்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன. இருப்பினும் அங்கு பலத்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது.
புனித முஸ்லிம் நோன்பு மாதமான ரமலானின் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-பித்ர் பண்டிகையை மக்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். மேலும் மசூதிகளில் அன்றைய முதல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஏவுகணையை தடுத்ததால் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. பஹ்ரைனில் உள்ள எண்ணெய் கிடங்கும் ஈரான் டிரோன்களால் தாக்கப்பட்டது. இதனால் அந்த எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்தது. சவுதி எண்ணெய் கிடங்கை குறிவைத்து வந்த ஈரான் நாட்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து, இஸ்ரேல் மீது பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு மட்டுமல்லாமல், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று சிரியா மீதும் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் உள்ள போராளிகளின் வாகன அணிவகுப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதுடன், மத்திய டமாஸ்கஸில் உள்ள சிரியா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்தையும் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் மூன்று போர்க்கப்பல்களையும், சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் அனுப்பி வைப்பதாக ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். யுஎஸ்எஸ் பாக்சர் போர்க்கப்பல் மற்றும் இரண்டு நீர்-நிலத் தாக்குதல் கப்பல்கள் ஆகியவற்றுடன், 11-வது கடற்படைப் பயணப் பிரிவைச் சேர்ந்த சுமார் 2,500 வீரர்கள் சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இந்த கப்பல்கள் மத்திய கிழக்கில் எந்த இடத்திற்குச் செல்கின்றன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
* ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க டிரம்ப் உதவியை கேட்கும் ஜப்பான்
ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க உதவுமாறு நான் விடுத்த அழைப்பில், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இணையவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைகூறியதை தொடர்ந்து, உடனே அமெரிக்கா சென்ற ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, ‘உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட உங்களால் மட்டுமே முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று டிரம்ப்பிடம் தெரிவித்தார். மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் வந்து செல்ல டிரம்ப் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
* சவுதி அரேபியாவில் இந்தியர் பலி
சவுதி அரேபியாவில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கடந்த மார்ச் 18ஆம் தேதி நடந்த ஈரான் தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாக இந்தியத் தூதரகம் அறிவித்தது. இதுதொடர்பான சமூக ஊடகப் பதிவு ஒன்றில்,’ மார்ச் 18ஆம் தேதி நிகழ்ந்த சம்பவங்களின் விளைவாக, ரியாத்தில் இந்தியர் ஒருவர் துயரமான முறையில் உயிரிழந்ததற்கு இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த இந்தியரின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தாங்கள் தொடர்பில் இருப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.
* ஏவுகணை தயாரிப்பு தொடர்கிறது
ஈரானின் அணுஆயுத ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் திறன் முடக்கப்பட்டுவிட்டதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு கூறினார். ஆனால் ஈரான் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள் ஏவுகணைகள் இன்னும் உற்பத்தியில் இருப்பதாக தெரிவித்தனர். புரட்சிகரக்காவல் படையின் செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நயீனி கூறுகையில்,’போர்ச் சூழல்களிலும் நாங்கள் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறோம், இது ஆச்சரியமானது. மேலும், அவற்றைச் சேமித்து வைப்பதில் குறிப்பிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லை. போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் ஈரானுக்கு இல்லை. எதிரி முற்றிலுமாகச் சோர்வடையும் வரை போர் தொடரும்’ என்றார்.
* அமெரிக்கப் போர் விமானங்களை தரையிறக்க இலங்கை மறுப்பு
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மத்தல சர்வதேச விமான நிலையத்தில், தனது இரண்டு போர் விமானங்களை தரையிறக்க அமெரிக்கா விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததாக, இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ ஜிபூட்டியிலிருந்து வந்த இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள், மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இலங்கைக்குள் நுழைய அனுமதி கோரியது. பல அழுத்தங்கள் இருந்தபோதிலும், நாங்கள் எங்கள் நடுநிலைத்தன்மையை நிலைநிறுத்த விரும்புகிறோம். நாங்கள் எதற்கும் பணியமாட்டோம். மத்திய கிழக்குப் போர் சவால்களை ஏற்படுத்தினாலும், நடுநிலையாக இருப்பதற்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்’ என்றார்.
* துபாயில் ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூடப்பட்டன
ஈரான் போரின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ஈரானியத் தாக்குதலுக்கு மீண்டும் மீண்டும் இலக்காகி வருவதால், துபாயில் உள்ள ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. துபாயில் 1972ல் திறக்கப்பட்ட ஈரானிய மருத்துவமனை நேற்று மூடப்பட்டது. அதன் இணையதளம் செயலிழந்திருந்தது மற்றும் அதன் தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டிருந்தது.
* எதிரிகளிடமிருந்து பாதுகாப்பைப் பறிக்க வேண்டும்: ஈரான் புதிய உச்ச தலைவர் அழைப்பு
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியை இஸ்ரேல், அமெரிக்க படைகள் கொன்ற பிறகு புதிய உச்ச தலைவராக பதவி ஏற்றுள்ள அவரது மகன் அயதுல்லா மொஜ்தபா கமெனி, தனது தேசத்தின் எதிரிகளிடமிருந்து அவர்களின் பாதுகாப்பைப் பறிக்க வேண்டும் என்று நேற்று புதிய அழைப்பு விடுத்தார்.
* உலக சுற்றுலாத்தலங்களை தாக்குவோம்: ஈரான் புதிய மிரட்டல்
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக உலகில் உள்ள சுற்றுலாத்தலங்களை தாக்கப்போவதாக ஈரான் புதிய மிரட்டல் விடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் இனிமேல் எதிரிகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானின் உயர்மட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ஷெகார்ச்சி தெரிவித்தார். இதனால் போரில் ஒரு அழுத்த உத்தியாக, மத்திய கிழக்கு பகுதிக்கு அப்பால் தாக்குதல்களை ஈரான் மீண்டும் செயல்படுத்தக்கூடும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.
* சொமேட்டோவில் டெலிவரி கட்டணம் உயர்வு
மத்தியகிழக்கில் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ அதன் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி, இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் அதன் நுகர்வோரிடமிருந்து முன்பு ரூ.12.50 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.14.90ஆக உயர்ந்துள்ளது. இது ஜிஎஸ்டிக்கு முந்தைய விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 19 சதவீத கட்டண உயர்வு(ரூ.2.40) உயர்வு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதேபோல், சொமேட்டோவின் போட்டி நிறுவனமான சுவிக்கி ஒரு ஆர்டருக்கு ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.14.99 கட்டணம் வசூலிக்கிறது. சொமேட்டோ கோல்ட் உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். செயல்பாட்டு செலவுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
