×

எந்த ரேடாரிலும் சிக்காத அமெரிக்காவின் எப்.35 போர் விமானம் ஈரான் ஏவுகணை தாக்குதலில் சேதம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதி நவீன எப்.35 போர் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28 ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா போரை தொடங்கியது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நாட்டின் உச்சபட்ச தலைவர் கமேனி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மத்திய கிழக்கு முழுவதும் மூண்டுள்ள போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மதிப்புமிக்க மற்றும் கண்ணுக்குத் தெரியாத, ரேடாரில் கூட சிக்காத ஐந்தாம் தலைமுறை எப் 35 லைட்டினிங் 2 போர் விமானத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த விமானத்தை அவசரமாக அமெரிக்க அதிகாரிகள் தரையிறக்கியுள்ளனர். ஈரானின் வான்பரப்பில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவின் அதி நவீன எப்.35 விமானம் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.

ஈரான் வான்பரப்பில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்க விமானம் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறியதாக, சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது எப்.35 விமானம் பாதிப்படைந்ததாக கூறப்பட்டுள்ளது. தாக்குதலை தொடர்ந்து எப் 35 விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அதிலிருந்த விமானியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் எப் 35 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஏவுகணை தாக்குதலில் அந்த விமானம் சேதமடைந்தது இது தான் முதல் முறையாகும். இந்த போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அதிநவீன எப்35 போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன.

* ஆணவத்தின் சின்னம்
எப்35 விமானத்தை வெற்றிகரமாக தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் கூறி வரும் நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், எப்35 வெறும் ஒரு போர் விமானம் மட்டுமல்ல, அது அமெரிக்க ராணுவத்தின் வெல்லமுடியாத தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஒரு நினைவுச்சின்னமாகத் திகழ்ந்தது.எந்தக் கண்ணுக்கும் புலப்படாதது மற்றும் எல்லா சக்திகளையும் விட மேலானது என்று கூறப்படும் ஒரு இறையியல் சின்னம். ஆயினும், கடவுளின் கரம் அவர்களின் கைகளுக்கு மேலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

* ஈரான் போரில் இதுவரை 6 இந்தியர் பலி
ஈரான் போரில் இதுவரை பல்வேறு சம்பவங்களில் 6 இந்தியர்கள் பலியாகி உள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது. வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசீம் ஆர். மகாஜன் இதுகுறித்து கூறுகையில்,’சவுதி அரேபியா, ஓமன், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள எங்களின் தூதரகங்கள், காணாமல் போன இந்தியக் குடிமகன் குறித்தும், உயிரிழந்த இந்தியக் குடிமக்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்குக் கொண்டுவருவது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன. பிப்ரவரி 28 முதல், வளைகுடா பகுதியிலிருந்து சுமார் மூன்று லட்சம் பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Tags : Washington ,Iran ,Islamic Revolutionary Guard Corps ,US ,Israel ,
× RELATED உலகின் சக்திவாய்ந்த போர் விமானம்...