அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்கப்படுமா?

காரைக்குடி, மார்ச் 20: காரைக்குடி ரயில் நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி சூரக்குடி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி மருத்துவமனைக்கு செல்ல போதிய அளவில் டவுன் பஸ் இல்லாததால் ரூ.300 கொடுத்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அரசு கட்டணமில்லாமல் வழங்கும் சிகிச்சை பெற பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தவிர இந்த பகுதிக்கு கூடுதலாக டவுன் பஸ் இயக்கப்படும் பட்சத்தில், பாண்டியன் நகர், கேவிஎஸ் நகர், கே.கே. நகர், கம்பன் நகர், மாருதி நகர், விஏஓ காலனி, தாசில்தார் நகர், ஹவுசிங் போர்டு, காவலர் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிமக்களுக்கு பெரும் பயனாக அமையும்.

அதேபோல் பத்திரபதிவு அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், ஆவின் நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்படும் வகையில் டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும். புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அழகப்பா கல்லூரிகள், செஞ்சை, கல்லுகட்டி, செக்காலை ரோடு, பழைய சந்தைபேட்டை உள்பட நகரின் முக்கிய பகுதிகளிலுக்கு செல்லும் வகையில் கூடுதலாக சுற்றுப்பேருந்து இயக்கப்பட வேண்டும். தவிர அனைத்து ரயில்கள் வரும் நேரத்துக்கு தனியாக இரண்டு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: