பழநி, மார்ச் 20: தமிழக கல்வித்துறை சார்பில் 2026-27ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் மாற்றம் மற்றும் வடிவமைப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம், ஜேஇஇ, நீட் போன்றவை பெரியஅளவில் கருத்துக்களாக இடம்பெற்று வருகின்றன. பள்ளிகளில் அனைத்துப்பிரிவு மாணவர்களும் பயில்கின்றனர். குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களே அதிக அளவில் பயின்று வருகின்றனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளும் நடத்தப்படுகிறது. தவிர, டிஎன்பிஎஸ்சி, டிஇடி, போலீஸ், எஸ்ஐ, யுபிஎஸ்சி, வங்கித்தேர்வுகள் என பலதரப்பட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, பள்ளி பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு வரை இதுபோன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க தமிழக கல்வித்துறை பரிசீலித்து கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி முடிவெடுக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
