விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அலுவலர் பெருமாள் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திருச்செந்தூர் செல்வதற்காக அவ்வழியாக காரில் வந்தார். அப்போது, அவரது காரை நிறுத்திய பறக்கும் படையினர், தேர்தல் நடத்தை விதியை மீறி காரில் தேசிய கொடி கட்டப்பட்டுள்ளதை அகற்ற கூறினர். தொடர்ந்து, முதல்வர் காரில் சோதனை செய்ய முயன்றனர். அதற்கு முதல்வர் ரங்கசாமியுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து, ‘‘முதல்வரின் காரை நீங்கள் எப்படி சோதனை செய்யலாம்?’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கவனித்த முதல்வர் ரங்கசாமி, ‘‘அவர்கள் சோதனை செய்யட்டும்’’ என்று கூறிய பிறகே, பாதுகாப்பு அதிகாரிகள் அமைதியாகினர். இதன்பிறகு பறக்கும் படையினர் முதல்வரின் கார் மற்றும் அவருடன் வந்த 5 கார்களையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதன் பிறகு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் காரியாபட்டி அருகே ஆவியூர் சோதனைச்சாவடி வழியாக வந்தார். அப்போது பறக்கும் படையினர் சோதனை செய்வதற்காக அவரது காரை நிறுத்தினர். அமைச்சர் தங்கம் தென்னரசு காரில் அமர்ந்திருக்க, பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்துவிட்டு அனுப்பி வைத்தனர்.
