இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் எல்பிஜி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்

 

டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் எல்பிஜி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் போர் நீடித்து வருகிறது. இப்போரின் முதல் நாளான கடந்த மாதம் 28ம் தேதி, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நாசிர்ஜாதே, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி ஷம்கானி, முப்படைகளின் தலைமை தளபதி அப்தோல்ரஹீம் மவுசவி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இஸ்ரேல் படைகள் மீண்டும் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 17ம் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி மற்றும் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையின் பசிஜ் பிரிவின் தலைவர் சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். அயதுல்லா கமேனியால் நியமிக்கப்பட்டு அவருக்கு மிகவும் நெருக்கமான ஈரானின் 2ம்கட்ட தலைவராக இருந்தவர் லாரிஜானி. அவரது இழப்பு ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த கூடியது. லாரிஜானியின் மரணத்தை ஈரான் அரசு நேற்று உறுதி செய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3வது உயர்மட்ட அதிகாரியான உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று அறிவித்தார்.

67 வயதான அலி லாரிஜானி, மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனிக்கு பிறகு ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக கருதப்பட்டார். இவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது குறித்து சமூகவலை தளத்தில் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள பதிவில், ‘சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் உரிய பழிவாங்கல் உண்டு. இந்த தியாகிகளின் குற்றவாளிகளான கொலையாளிகள் விரைவில் அதற்கான விலையை கொடுக்க நேரிடும். லாரிஜானி அறிவு, தொலை நோக்கு மற்றும் ஞானம் கொண்ட மனிதர். இஸ்லாமிய அமைப்பின் பல்வேறு நிலைகளில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் சேவையாற்றினார். அதுவே அவரை ஒரு புகழ்பெற்ற ஆளுமையாக உருவாக்கியது’ என்றார்.

இஸ்ரேல் தாக்குதல்களில் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதை ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் உறுதிசெய்து, அதனை ஒரு கோழைத்தனமான படுகொலை என்று குறிப்பிட்டார். மேலும், ஈரான் தலைவர்கள் அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரின் மரணங்கள் குறித்தும் தனது வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், ஈரான் அதிபர் கூறுகையில், ‘எனது அன்புக்குரிய சகாக்களான இஸ்மாயில் காதிப், அலி லாரிஜானி, மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிாப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கத்தாரை சேர்ந்த அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ராஸ் லஃபான் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையங்களில் ஒன்று என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல், கடுமையான சேதத்தை விளைவித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில், கத்தாரையும் அதன் அண்டை நாடுகளையும் ஈரான் தொடர்ந்து குறிவைத்து வருவது கண்டிக்கத்தக்கது’ என கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கத்தாரில் உள்ள ஈரானிய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களை வெளியேறுமாறு கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய திட்டம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த கூடுதல் படைகள் கச்சா எண்ணெய், காஸ் சப்ளைக்கு முக்கிய கடல் வழித்தடமாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்பட பல்வேறு ராணுவ பணிகளை மேற்கொள்ள உள்ளது.

ஈரானின் 90 சதவீதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கையாளும் கார்க் தீவுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்புவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என்று அமெரிக்கா படையை சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அந்த வகையில் அமெரிக்கா சார்பில் ஈரானுக்கு இப்போதைக்கு தரைப்படை (ராணுவம்) அனுப்பும் முடிவு இல்லை. ஆனால் ராணுவத்தை அனுப்புவது உள்பட அனைத்து விஷயங்களையும் டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார். இதனால் ஈரானுக்குள் அமெரிக்க ராணுவம் இறங்க உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் போர் இன்னும் மோசமாகும். அதோடு நீண்டகால போராக மாறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் சீனா, பாகிஸ்தான்: தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கபார்ட் பேச்சு

அமெரிக்காவில் செனட் குழு கூட்டத்தில் அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கபார்ட் பேசியதாவது: ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமெரிக்காவை தாக்கும் வரம்பிற்குள் கொண்டுவரக்கூடிய, அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களை கொண்ட பல்வேறு வகையான புதிய, மேம்பட்ட அல்லது பாரம்பரிய ஏவுகணை செலுத்தும் அமைப்புகளை ஆராய்ச்சி செய்து உருவாக்கி வருகிறது.
தற்போது மதிப்பிடப்பட்டுள்ள 3,000 ஏவுகணைகளின் எண்ணிக்கையிலிருந்து, 2035ம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்கள் கூட்டாக 16,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளாக விரிவடையும். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி செல்லும் திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணை செலுத்தும் அமைப்புகளை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கி வருகிறது. பாகிஸ்தானின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மேம்பாட்டில், அமெரிக்காவையே தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் இடம்பெறக்கூடும். அமெரிக்காவுக்கு சீனாவும் ரஷ்யாவும் மிகவும் தீவிரமான அச்சுறுத்தல்களாக உள்ளன.

ஈரான் மீதான கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சிதைந்து விட்டது: சவுதி
ஈரானின் அலி லாரிஜானி மற்றும் சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் அரபு நாடுகள் மீதும் ஈரான் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதற்கு சவுதி இளவரசர் பைசல் பின் பர்ஹான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், சவுதி எண்ணெய் வளங்கள் மீதும், சவுதி, அமீரகத்தில் பொதுமக்கள் மீதும் சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. எங்கள் பொறுமை எல்லையற்றது அல்ல. ஈரான் மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சிதைந்து விட்டது. ஈரானின் மிரட்டல் முயற்சியை கண்டு நாங்கள் அச்சப்படவில்லை. ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் உரிமை சவுதிக்கு உள்ளது என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: