2,000 டன் நெல் மூட்டைகள் ரயிலில் காட்பாடிக்கு வந்தது லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு கும்பகோணத்தில் இருந்து

வேலூர், மார்ச் 20: வேலூர் மாவட்டத்திற்கு நேற்று 2,000 டன் நெல் மூட்டைகள் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அதை லாரிகளில் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்த நெல், அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் அரிசி மூட்டைகள் ரயில் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ெகாள்முதல் செய்து அரிசியாக மாற்றி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கும்பகோணத்தில் இருந்து, வேலூர் மாவட்டத்திற்கு 2,000 டன் நெல் மூட்டைகள் ரயிலில் காட்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த நெல் மூட்டைகளை பிரித்து லாரிகள் மூலம் நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகள் அரிசி அரவை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நெல் அரவை பணிகள் முடிந்து, அரிசியாக மாற்றப்பட்டு, மீண்டும் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: