வேலூர், மார்ச் 18: சட்டமன்ற தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் கார்களில் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதனையொட்டி பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகள் மறைக்கப்பட்டு வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேப் போன்று மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வகித்து வரும் பதவியின் பெயர் பலகைகளை தங்களது சொந்த வாகனங்களில் கூட பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று அரசியல் கட்சியினர் தங்களது சொந்த வாகனங்களில் கட்சிக் கொடிகளை பறக்க விடக்கூடாது. கார்களில் கொடிகளை கட்டிக் கொள்ள அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து 3 நாட்களாகியும் இன்னமும் பல இடங்களில் அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும், மக்கள் பிரதிநிதிகள் தங்களது சொந்த வாகனங்களில் தாங்கள் வகித்து வரும் பதவியின் பெயர் பலகை மற்றும் கட்சிக் கொடிகளுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பின்பற்றி அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடிகளுடன் வலம் வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டக்கூடாது. கட்சிக் கொடி கட்ட தொகுதி தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் இதுவரை யாரும் கொடிகளைக் கட்டிக் கொள்ள அனுமதி பெறவில்லை. பறக்கும் படையினரிடம் கூறி, வாகன சோதனையின்போது வாகனங்களில் கட்டப்பட்டுள்ள கொடிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
