ஐதராபாத்: 19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம்தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக 10 அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல்கட்டபோட்டிகளை தவறவிடுகிறார். இதனால் கேப்டனாக இஷான்கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே டி.20 உலக கோப்பையில் தடுமாறியபோது முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் ஆலோசனை குறித்து அபிஷேக் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு நேர்மையான அறிவுரைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் உடனடியாக யுவி பாஜியிடம் தொடர்ந்து பேசுவேன்.
அவர் எனக்கு சொல்லும் செய்தி மிகவும் எளிமையானது. ஒரு வீரராக நீங்கள் யார் என்பதை மாற்றிக் கொள்ளாதீர்கள், ஆக்ரோஷமாக விளையாடும் வீரர்களுக்கு இது போன்ற கட்டங்கள் வரும், ஆனால் உங்கள் பலத்தை நீங்கள் தொடர்ந்து நம்பினால், உங்களுக்கு ரன்கள் வரும் என்று கூறினார். இது போன்ற ஒரு அனுபவங்கள் உங்களை ஒரு வீரராக உருவாக்குகின்றன. இவ்வளவு பெரிய தொடரில் நீங்கள் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் பொழுது நீங்களே கற்றுக் கொள்கிறீர்கள். இது என்னை ஆட்டத்தை அணுகும் முறையில் முதிர்ச்சி உள்ளவனாக மாற்றும் என்று நம்புகிறேன். இந்த அனுபவங்களை எடுத்துக்கொண்டு ஒரு வீரராக முன்னேறி செல்வதே என்னுடைய இலக்கு.
மன வலிமையும் செயல்முறையும் எவ்வளவு முக்கியம் என்பதை உலக்கோப்பை உங்களுக்கு சீக்கிரத்தில் கற்றுக் கொடுக்கும். ஒரு நல்ல ஆட்டத்திற்கு பிறகு அதிகம் உற்சாகமடையாமலும், ஒரு மோசமான ஆட்டத்திற்குப் பிறகு துவண்டு போகாமலும் இருக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொடர் முழுக்க எனக்கு கேப்டன் சூர்ய குமார் யாதவ் மிகப்பெரிய ஆதரவை கொடுத்தார். நான் ஒவ்வொரு முறை டக் அவுட் ஆகும் பொழுதும் அவர் கொடுத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரியதாக அமைந்தது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் உங்களுக்கு பின்னால் இருக்கும் போது நீங்கள் மீண்டு வர முடியும்” என்றார்.
