ஒன்றிய அமைச்சரவை முடிவு; பருத்தி கொள்முதலுக்காக ரூ.1,718 கோடி வழங்க ஒப்புதல்

புதுடெல்லி: கடந்த 2023-24 பருத்திப் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலுக்காக இந்திய பருத்தி கழகத்திற்கு ரூ.1,718.56 கோடியை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், 2023-24 பருத்தி பருவ காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலுக்காக இந்திய பருத்தி கழகத்திற்கு ரூ.1,718.56 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பருவத்தில் பருத்தியின் சந்தை விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே சரிந்தது. இதனால் இந்திய பருத்தி கழகம் 32.84 லட்சம் பருத்தி பேல்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்தது. இதன் மூலம் சுமார் 7.25 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். அவர்களுக்கு ரூ.11,712 கோடி நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

இந்த கொள்முதல் செயல்பாட்டிற்காக இந்திய பருத்தி கழகத்திற்கு ரூ.1,718.56 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாரத் ஆத்யோகிக் விகாஸ் யோஜனா என்ற பாரத் தொழில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்குவதற்காக ரூ.33,660 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. வெவ்வேறு மாநிலங்களில் 1 முதல் 25 மெகாவாட் திறன் கொண்ட சிறிய நீர்மின் திட்டங்கள் அமைக்க ரூ.2,585 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 1 மெகாவாட்டிற்கு ரூ.3.6 கோடி மானியமாக வழங்கப்படும்.

Related Stories: