தொடக்க காலத்தில் திமுகவில் இருந்த நடிகர் சரத்குமார், தனது ரசிகர்களின் வற்புறுத்தல் காரணமாக தனிக் கட்சி தொடங்கி சமத்துவ மக்கள் கட்சி என பெயர் சூட்டினார். ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்ட அவர், கடந்த 2011ம் ஆண்டில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார். அதன்பின்னர் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். கடந்த 2016ல் மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாமல் திண்டாடிய சரத்குமார், ஒரேநாள் இரவில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜவோடு இணைத்தார். தனக்கும், தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும் பாஜவில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இதுநாள் வரை கிட்டவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பழைய சமக நிர்வாகிகளும், தொண்டர்களும் வேறு கட்சிக்கு செல்லலாம் என அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிது.
இந்நிலையில் சமீபத்திய முகநூல் பதிவில், அவர் தனது ஆற்றாமையை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘பா.ஜ. கட்சியுடன் முழுமையாக இணைத்து இன்றுடன் 2 ஆண்டுகளாகின்றன. என்னுடன் பயணித்த நிர்வாகிகள் சோர்ந்து இருந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால், பல ஆண்டுகள் என்னுடன் பயணித்த உறவுகளையும், குடும்பங்களையும் ஒன்றிணைத்து, ஏற்கெனவே செய்து வந்த பணியான சமத்துவ விருந்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி அதில் பாஜ கட்சி முன்னோடிகளின் புகைப்படங்களை இணைத்து, அழைப்பு விடுத்து, விளம்பரப்படுத்தி கும்பகோணம், ராணிப்பேட்டை, சென்னை, பெரம்பலூர், சேலம் உட்பட பல இடங்களில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தினேன்.
கடந்த 2 ஆண்டுகளில் பொறுப்புகள் வழங்கப்படாத சூழ்நிலையிலும், சோர்வடையாமல் பயணிக்கும் நிர்வாகிகள் பலமுறை எனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று எண்ணி வருத்தப்பட்டாலும், “பொறுத்தார் பூமியாழ்வார்’’ என்ற பழமொழிக்கேற்ப இவற்றையெல்லாம் “இதுவும் கடந்து போகும்’’ என்ற அடிப்படையில், தே.ஜ. கூட்டணியின் வெற்றியை இலக்காக கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் பணியாற்றவிருக்கும் நாம், நமது உற்சாகத்திலிருந்து சிறிதளவும் தளர்ந்து விடக்கூடாது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 2 ஆண்டுகள் நீங்கள் என்னுடன் இணைந்து ஆற்றிய பணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கலந்த வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தனக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள நடிகர் சரத்குமார், தொண்டர்கள் சோர்வையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் திமுக பக்கம் தாவக்கூடும் என்கிற தகவல்களும் உலா வருகின்றன.
* இந்த தேர்தலோடு எடப்பாடி அரசியல் வாழ்க்கை க்ளோஸ்: நாள் குறித்த ஓபிஎஸ்
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பரப்புரை ஆலோசனை கூட்டம் நாங்குநேரி அருகே உள்ள செங்குளத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். எடப்பாடி தலைமையேற்ற பிறகு இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியைத் தான் சந்தித்து வருகிறது. மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர். துரோகத்தை மக்கள் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக வாக்களித்தேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு. ஆபத்து காலத்தில் உதவி செய்தவர்களை அவர், ஒருநாளும் நினைத்துப் பார்த்தது கிடையாது. வரும் சட்டமன்ற தேர்தலோடு அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.
* விஜய் வர்றாரா வரலையா என்பது பரம ரகசியம்: வைகைச்செல்வன் சஸ்பென்ஸ்
அதிமுக முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் காஞ்சிபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் 41 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தி, மூன்றாவது கட்டமாக விசாரணை நடைபெற்றுள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் விசாரணைக்கு சென்றுள்ளார். விசாரணை முடிந்ததற்கு பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். விஜய் நம் கூட்டணிக்கு வருகிறாரா, வரவில்லையா என்பது பரம ரகசியம். அதிமுக மிகப் பிரகாசமாக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
