மதிமுகவுக்கு வழங்கிய தொகுதிகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம் கலைஞருக்கு அளித்த வாக்குறுதிபடி மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்: வைகோ பேட்டி

சென்னை: மதிமுகவுக்கு வழங்கிய தொகுதிகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம். கலைஞருக்கு அளித்த வாக்குறுதிபடி மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று வைகோ கூறினார். மதிமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி தமிழர் வரலாறு மீட்பு, வேளாண்மை பால் உற்பத்தி மீனவர்களின் நலன், கடல் வளம், போதைப்பொருள் ஒழிப்பு, மாற்றுத்திறனாளிகள் நலன், தமிழ் ஈழமே தீர்வு 51 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதன்பின் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயரை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரண வழங்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பழக்கமாகும். எனவே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.

திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் முதல்வருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. நிறைய கட்சிகளின் நிர்ப்பந்தம் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இரண்டு இடங்கள் குறைவாக மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான் அரசியலில் 62 ஆண்டுகள் பயணித்து வருகிறேன். கலைஞரின் இறுதி நாட்களில் நான் அவரிடம் ஒரு வாக்கு கொடுத்தேன். ஒரு காலத்தில் நான் உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தேனோ, அதேபோல மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என அவரது கையை பற்றி உறுதி அளித்தேன். வருங்காலத்திலும் திமுகவுக்கு தோள் கொடுப்போம். திமுக எங்களுக்கு வழங்கிய இடங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: