தென்காசி: தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்ட பேனரில் நயினார் நாகேந்திரன் படம் இல்லாததற்கு பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து தனி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமி படமும், பிரதமர் மோடியின் படமும் பெரிதாக இடம் பெற்று இருந்தது. அதிமுக என்ற வார்த்தை பெரிதாகவும் தலைமையிலான என்ற வார்த்தை சிறியதாகவும் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
பேனரில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் படம் மட்டும் இடம் பெறவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட பாஜவினர் முணுமுணுத்தனர். அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்த போது பாஜவினர் தனியாக மேடைக்கு அருகில் இருந்த மரத்துக்கு சென்று தனியாக நின்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரித்தபோது பாஜவினர் பேனரில் நயினார் படம் இடம்பெறாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். பாஜ மாவட்டத்தலைவர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் மாநில நிர்வாகிகளிடம் பேனரில் நயினார் படம் இடம்பெறவில்லை என்பதை நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் பேனரில் நயினார் மைக்கில் பேசுவது போன்ற புகைப்படத்தை கொண்டு வந்து ஒட்டினர். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘பிரதமர் கூட்டத்தில் கூட எடப்பாடி படம் இடம்பெறவில்லையே’ என்று தெரிவித்தனர்.
* பாஜ நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி.!
அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்காசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட பேனரில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் படம் இடம் பெறாத நிலையில் போராட்டம் நடைபெறும் போது அவசர அவசரமாக ஒட்டப்பட்டது. நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம் பெறாததற்கு அதிமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளியின் உள்குத்து இருப்பதாக தெரிய வருகிறது. பாஜ தென்காசி மாவட்ட தலைவராக இருப்பவர் ஆனந்தன் அய்யாசாமி. இவர் வருகிற தேர்தலில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட சீட் எதிர்பார்த்து தேர்தல் வேலைகள் செய்து வருகிறார்.
ஆனால் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளரான ஆனந்தன் அய்யாசாமிக்கு வாசுதேவநல்லூர் தொகுதி கிடைக்காமல் இருக்க, கூட்டணியில் உள்ள ஜான்பாண்டியனிடம் கூறி தொகுதியை தனக்கு கேட்குமாறு கூறினார். அதன்படியே ஜான்பாண்டியன் எடப்பாடியிடம் வாசுதேவநல்லூர் தொகுதியை கேட்டார். ஆனால் ஆனந்தன் அய்யாசாமி பிரபல ஐடி அதிபர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான ஸ்ரீதர் வேம்பு மூலமாக பாஜ மேலிடம் கவனத்திற்கு கொண்டு சென்றார். வாசுதேவநல்லூர் தொகுதியை பாஜவுக்கு ஒதுக்குமாறு எடப்பாடியிடம் பாஜ மேலிடம் அழுத்தம் கொடுத்தது, அதன் பேரில் பாஜ மேலிடம் ஒன்றிய சட்ட அமைச்சர் மற்றும் தெலங்கானா எம்எல்ஏ தலைமையில் வாசுதேவநல்லூர் தொகுதியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில் தென் மாவட்டங்களில் ஜான்பாண்டியன் கட்சிக்கு தொகுதி ஒதுக்க கூடாது என பல எதிர்ப்பு குரல் எழுந்த காரணத்தினால் அதிமுகவுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என தனது நெருங்கிய உறவினரான மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக மாசெ எம்எல்ஏ கிருஷ்ணமுரளி கேட்டதாக தெரிகிறது. ஆனால் நயினார் இந்த பிரச்னை மேலிடத்திற்கு வரை தெரிந்து வாசுதேவநல்லூர் தொகுதியை பாஜவுக்கு வாங்க சொல்லிவிட்டார்கள் என கூறி விட்டார். இதனால் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுகவிற்கு தான் எனக்கூறி அதிமுக மாசெ எம்எல்ஏ கிருஷ்ணமுரளி தனது ஆதரவாளர்கள் 7 பேரிடம் சீட் வாங்கி தருவதாக கூறி 6 கோடி வரை வசூல் செய்ததாக தெரிய வருகிறது.
இதனால் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்படுவது உறுதியான காரணத்தினால் விரக்தி அடைந்த எம்எல்ஏ கிருஷ்ணமுரளி, தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் நெருங்கிய உறவினரே, என்னை ஏமாற்றி விட்டார் என புலம்பியதாக தெரிகிறது. இதனால் கிருஷ்ணமுரளி ஆதரவாளர்கள் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகைப்படத்தை வேண்டும் என்றே தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் கடுப்பான தென்காசி பாஜ மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தனது கட்சியினருடன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்று ‘‘எங்கள் மாநில தலைவர் படம் வைத்தால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்” என மேடை அருகே கட்சியினருடன் ஒதுங்கி நின்றார். பின்னர் நயினார் நாகேந்திரனின் பேப்பர் படம் பசை கொண்டு பேனரில் ஒட்டப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பாஜவினர் கலந்து கொண்டனர்.
