நன்றி குங்குமம் தோழி
“சைக்கிள் ஓட்ட கத்துக்கணும் தங்கச்சி…
வாழ்க்கை சக்கரத்தை சுத்திவிடு தங்கச்சி…”
இது அறிவொளி இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை அளிப்பதற்காக ஒலிபரப்பப்பட்ட ஒரு உத்வேக பாடல். 1990களின் தொடக்கத்தில் தமிழ்நாடு எங்கும் இயங்கி வந்த அறிவொளி இயக்கம், பெண்களிடையே கல்வியை ஊக்குவிப்பதற்காக எழுத்தறிவு போன்ற பயிற்சியை அளித்து வந்தது. இந்த இயக்கத்தினால் பெண்கள் பலரும் எழுத்தறிவு பெற்று வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அறிவொளி இயக்கத்தில் மட்டும் எழுத்தறிவு மட்டுமின்றி, பெண்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அந்த சமயம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத் இத்திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தி பெண்களை ஊக்குவித்து வந்தார். பெண்கள் பலரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டனர். சைக்கிளை தள்ளுவதில் தொடங்கி குரங்கு பெடல் அடிப்பது பின்னர் வேகமாக சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொண்டனர். இதனால் பெண்களுக்கு ஒரு உத்வேகம் பிறந்தது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சைக்கிளில் செல்ல முடிந்தது. சைக்கிள் ஓட்டுவதால் பெண்களுக்கு கிடைத்த இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாக இருந்தது.
தமிழகத்தில் சமூக மாற்றத்திற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாக திகழ்ந்த அறிவொளி இயக்கம், வெறும் எழுத்தறிவு கற்பித்ததிலேயே நின்றுவிடாமல், குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில், இந்த இயக்கம் பெண்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய ஒரு முன்னோடியான முயற்சியாக அமைந்தது. கல்வியுடன் சேர்த்து சைக்கிள் ஓட்டும் பயிற்சியும் வழங்கப்பட்டமை, பெண்களின் சுயநிலையை உயர்த்திய ஒரு புதிய பரிமாணமாகும். அறிவொளி இயக்கம் தொடங்கிய காலத்தில், கிராமப்புற பெண்களில் பலர் வீட்டைத் தாண்டி வெளியுலகத்தை அனுபவிக்க முடியாத நிலையிலும் பள்ளிக்கூடத்திற்கே செல்லாத அவர்கள் தங்கள் பெயரை எழுதவும் தெரியாத நிலையிலும் இருந்தனர்.
இந்த நிலையை மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவொளி வகுப்புகள், அவர்களுக்கு எழுத்தறிவை மட்டுமல்ல, வாழ்க்கைத் திறன்களையும் வழங்கின. சைக்கிள் ஓட்டும் பயிற்சி இதில் முக்கியமானது. இது சாதாரணமாகத் தோன்றினாலும், அந்த காலகட்டத்தில் ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவது சமூகத்தில் ஒரு பெரிய மாற்றமாகவே பார்க்கப்பட்டது. பல இடங்களில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை சமூகக் கட்டுப்பாடுகள் தடுத்தன. ஆனால், அறிவொளி இயக்கம் இந்த தடைகளை உடைத்தெறிந்தது.
பெண்கள் கூட்டமாக ஒன்று கூடி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதுடன் மற்ற பெண்களுக்கு கற்றுக்கொடுத்தும் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். ஆரம்பத்தில் பயம், தயக்கம் இருந்தாலும், சில நாட்களில் அவர்கள் தன்னம்பிக்கையுடன் சாலையில் சைக்கிள் ஓட்டத் தொடங்கினர். இது அவர்களுக்கு வெறும் போக்குவரத்து வசதிக்கு மட்டுமல்லாமல், சுதந்திரத்தின் அடையாளமாகவும் மாறியது.
அறிவொளி இயக்கம் குறித்த நிறைய பாடல்கள் இயற்றி ஒலிபரப்பப்பட்டது. சைக்கிள் ஓட்டும் பயிற்சியை ஊக்குவிக்க அமைக்கப்பட்ட பாடல், பெண்கள் சைக்கிள் ஓட்டுவதில் முன்னேற்றம் அடைந்ததும், அவர்களின் கோரிக்கையின்படி பாடலின் வரிகள் சற்று மாற்றப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. பெண்கள் பாடுவது போல் அமைக்கப்பட்ட பாடலில்…
“சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டோம் அண்ணாச்சி…
வாழ்க்கை சக்கரத்தை சுத்திவிட்டோம் அண்ணாச்சி…
காருக்காக நாங்க இப்போ கால்கடுக்க நிக்குறதில்லே…
ஊருக்குள்ளே வந்து பாரு அண்ணாச்சி… – இப்ப
அறிவொளியில் படிச்சுக்கிட்டே பாடத்தோட சைக்கிள் ஒட்டி…
ரேசன் கடைக்கு போய் வருவோம் அண்ணாச்சி… சைக்கிளில்
ரேசன் கடைக்கு போய் வருவோம் அண்ணாச்சி…
ஆத்திரமா அவசரமா ஆஸ்பத்திரிக்கு போகணும்னா…
ஆம்பளைங்கள கெஞ்சுறதில்லே அண்ணாச்சி… அப்போ
ஊமைப்போல அடுப்படியில் ஒடுங்கி கிடந்த நாங்க இப்போ…
உலகம் பூரா சுத்தி வருவோம் அண்ணாச்சி… இனிமே
உலகம் பூரா சுத்தி வருவோம் அண்ணாச்சி!” என்ற வரிகள் இடம்பெற்றன.
அறிவொளி இயக்கத்தின் மூலம் சைக்கிள் ஓட்டும் பயிற்சியினால் பெண்கள் அடைந்த முன்னேற்றம் இந்தப் பாடல் மூலமே வெளிப்பட்டுவிடும். புதுக்கோட்டையை சேர்ந்த தமிழாசிரியர் முத்துபாஸ்கரன் இப்பாடலை இயற்றியுள்ளார். சைக்கிள் ஓட்டத் தெரிந்ததால், பெண்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வேலைக்குச் செல்லவும், சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கவும், குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு செல்லவும் தன்னம்பிக்கையுடன் சென்றனர். இது அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது.
மேலும், சைக்கிள் பயிற்சி பெண்களின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய மாற்றமே அறிவொளி இயக்கத்தின் உண்மையான வெற்றி. கல்வி, திறன், தன்னம்பிக்கை போன்றவற்றை ஊக்குவித்தால் பெண்கள் எந்தத் தடையையும் கடக்க முடியும் என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு சான்று. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட தருணம், பல பெண்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியுள்ளது என்பது தெளிவாகிறது.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
