பெண்களுக்கும் உடற்பயிற்சி அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

பாடி பில்டிங்… பொதுவாக ஆண்களின் களமாகத்தான் இருந்து வந்தது. இப்போது பெண்களும் அந்த களத்திற்குள் தங்களை இணைக்க முன்வந்துள்ளார்கள். இன்று பெண்களில் பலர் தொழில்முனைவோர்களாக வளர்ந்து வந்தாலும், பாடி பில்டிங் என்பது அவர்களுக்கு புதியதாக இருந்தாலும், அதில் தன்னால் சாதிக்க முடியும் என்று தைரியமாக முன்னெடுத்துள்ளார் கோவையை சேர்ந்த சவுமியா.

ஐ.டி துறையில் வேலை பார்த்து வரும் இவர், தனக்குப் பிடித்த பாடிபில்டிங் துறையில் சைலன்டாக சாதித்து வருகிறார்.‘‘கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கோவையில் ஒரு நிறுவனத்தில் நெட்வொர்க்கிங் துறையில் பணியில் சேர்ந்தேன். நான் சாப்பாட்டு பிரியை. சின்ன வயசில் இருந்ேத நல்லா சாப்பிட்டு பழகியதால், எங்க வீட்டிலேயே நான்தான் குண்டா இருப்பேன். அதனால வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் இப்படி குண்டா இருந்தா எப்படி மாப்பிளை பார்க்கிறதுன்னு கிண்டல் செய்தாங்க.

ஒருநாள் இரவு உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன். ஜிம்மில் சேர்ந்தேன். எடையை குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு பயிற்சி எடுத்தேன். எடையும் குறைந்தது. அந்த சமயத்தில் எனக்கு பெங்களூருக்கு மாற்றம் ஏற்பட்டது. அங்கு வேலை வேலைன்னு ஓடிக் கொண்டே இருந்ததால் எனக்கான நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட விரும்பினேன். அது பற்றி என் ஜிம் மாஸ்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். இதற்கிடையில் பெங்களூரில் என்னுடைய பயிற்சி முடிந்ததால், மீண்டும் கோவைக்கே வந்துவிட்டேன். இங்கு வந்த பிறகு என் ஜிம் மாஸ்டர் உதவியுடன் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டேன்’’ என்றவர் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார்.

‘‘போட்டியில் நான்காம் இடம் வந்ததால் எனக்கு அதில் மேலும் ஆர்வம் அதிகமானது. எனக்கு காலை ஷிஃப்ட் வேலை என்பதால், மதியம் 3.30க்கு வீட்டுக்கு வந்திடுவேன். மாலை நான்கு மணிக்கு ஜிம்மிற்கு சென்று என்னுடைய பயிற்சிகளை ஆரம்பிப்பேன். ஆரம்பத்தில் 100 கிலோ எடையை என்னால தூக்க முடியுமான்னு யோசிச்சிருக்கேன். இப்போது 140 வரைக்கும் என்னால தூக்க முடியும். நான் பளு தூக்குதலில் ஈடுபட்டதைப் பார்த்த பலரும் என் பெற்றோரிடம் ‘பொம்பள பொண்ணுக்கு எதுக்கு இதெல்லாம்’னு கேட்டாங்க. ஆனா, அம்மாவும் அப்பாவும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்தாங்க’’ என்றவர், பாடிபில்டிங் மேல் ஈடுபாடு ஏற்பட்டது குறித்து விவரித்தார்.

‘‘ஜிம்மிற்கு சென்று பயிற்சி எடுப்பது என்னுடைய விருப்பமாகவே மாறிடுச்சு. உடல் சோர்வாக இருந்தாலும் ஜிம்மிற்கு செல்லாமல் இருக்கமாட்டேன். ஒருமுறை நான் என் மாஸ்டரிடம் ‘பாடி பில்டிங் செய்யலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். அவர் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார். காரணம், பளு தூக்குதல் போன்று கிடையாது. முறையான டயட் மற்றும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 100% ஒழுக்கமான நடைமுறையினை பின்பற்ற வேண்டும். 1% கூட கவனம் சிதறக்கூடாது. இது முழுக்க மனம் சார்ந்த விளையாட்டு. உன்னால் முடியுமான்னு கேட்டார். எல்லாவற்றையும் தாண்டி என் பெற்றோரின் அனுமதி முக்கியம் என்றார்.

வீட்டில் சொன்ன போது அம்மா கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பொண்ணா எப்படி பாடி பில்டிங் செய்ய முடியும்னு கேட்டாங்க. இது முழுக்க முழுக்க உடற்கட்டமைப்பு சார்ந்தது என்பதால், மேடையில் குறைந்த உடையில் என் தசைகளை வெளிப்படுத்த வேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு. ஆண்களின் கண்களுக்கு ஒரு வீராங்கனையாகத்தான் தெரிவேன். தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கமாட்டாங்கன்னு மிகவும் போராடி புரிய வைத்தேன்.

அதன் பிறகு முழு மூச்சாக பயிற்சி எடுத்தேன். கடந்த ஆண்டு காரமடையில் நடந்த போட்டியில் கலந்து கொண்டேன். அதில் கிடைத்த அனுபவங்கள் கொண்டு மேலும் என்னை மெருகேற்ற ஆரம்பித்தேன். பாடிபில்டிங் பொறுத்தவரை தொடர் பயிற்சி அவசியம். இத்தாண்டு ஜூலை மாதம் போட்டி நடக்க இருக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றவர், பாடி பில்டிங் மற்றும் பளு தூக்குதல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பகிர்ந்தார்.

‘‘பாடி பில்டிங் நம்முடைய உடலில் உள்ள தசைகளை அதிகரித்து கொழுப்பினை குறைக்க வேண்டும், வலுவாக்க வேண்டும். ஆனால், பளு தூக்குதலில் என்னுடைய உடல் எடையை விட ஒரு மடங்கு அதிக எடையினை தூக்க வேண்டும். அதாவது, நான் 60 கிலோ எடை இருக்கிறேன் என்றால், 120 கிலோவிற்கு மேல் எடையினை தூக்க வேண்டும். பாடிபில்டிங்கில் இரண்டு வகை இருக்கு. கட்டிங் மற்றும் பல்கிங். முதல் ரகத்தில் உடலில் உள்ள தசைகளை அதிகரித்து கொழுப்பினை குறைக்க வேண்டும்.

போட்டியின் போது உடற்கட்டமைப்பினைப் பார்த்து பரிசீலனை செய்வாங்க. பல்கிங், கட்டிங் நிலைக்கு முந்தைய கட்டம். உடலில் உள்ள நல்ல கொழுப்புகளைக் கொண்டு தசைகளை வலுவாக்குவது. இதற்கு பிறகுதான் கட்டிங் நிலைக்கு தயாராகி போட்டியில் பங்கு பெறுவார்கள். நான் முன்பு பளு தூக்குதல் செய்து வந்ததால், எடையை தூக்குவதில்தான் கவனம் செலுத்தினேன். இப்ப பாடிபில்டிங் செய்வதால், டயட் இருந்து என் தசைகளை வலுவாக்கி வருகிறேன்’’ என்றவர் அவரின் உணவு முறைகள் குறித்தும் விவரித்தார்.

‘‘ெபாதுவாக ஜிம் போனாலே புரதச் சத்துக்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவரின் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ப புரத அளவும் சீராக இருக்கணும். பாடி பில்டிங் செய்தால் இதைவிட அதிகளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிம் போகும் போது புரதம் மற்றும் பைபர்கள் எவ்வளவு தேவையோ அதை என் உணவில் சேர்த்துக் கொள்வேன். பாடி பில்டிங்கில் புரதம் கூடுதலாக சாப்பிடணும். அதாவது, காலை வேகவைத்த முட்டை மற்றும் பழங்கள் சாப்பிடுவேன். மதியம் சாதம், காய்கறி மற்றும் சிக்கன். மாலை நேரம் சுண்டல் போன்ற புரதச்சத்துள்ள உணவுகள். இரவு 150 கிராம் சிக்கன், காய்கறி, சப்பாத்தி. டயட்டில் புரதங்கள் அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். பயிற்சி காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்கணும்.

போட்டி நேரத்தில் வாட்டர் கட் செய்யணும். அதாவது, போட்டிக்கு ஐந்து நாட்கள் இருக்கிறது என்றால் முதல் நாள் நாலு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் தண்ணீரின் அளவை குறைத்துக் கொண்டே வர வேண்டும். போட்டி நாள் போது தண்ணீரே எடுக்க மாட்டோம். உடலில் தண்ணீரின் அளவு குறையும் போதுதான் தசைகள் வெளிப்படையாக தெரியும். பாடி பில்டிங் போட்டி ஜூலை என்பதால், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இடைப்பட்ட நேரத்தில் பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற இருக்கிறேன்’’ என்றவர் சைபர் செக்யூரிட்டி குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘எனக்கு பிட்னசில் முழுமூச்சா கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் விருப்பம். இப்ப குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கும் செல்கிறேன். மேலும், இந்த துறை எனக்கு புதிது. இதில் நல்ல அனுபவம் கிடைத்த பிறகு பெரிய அளவு போட்டிகளில் பங்கு பெறணும். பாடி பில்டிங் மட்டுமில்லாமல் பளு தூக்கும் போட்டிகளிலும் தேசிய அளவில் பங்கு பெறவேண்டும். பெண்கள் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கான உடற்பயிற்சியாளராக இருக்கணும்.

பாடி பில்டிங், பளு தூக்குதல் விளையாட்டில் பெண்கள் ஈடுபடும் போது பலர் பலவிதமா பேசுவதை கேட்டிருக்கேன். எப்படி ஒரு டாக்டர் தன்னுடைய வேலையில் உண்மையா இருக்காரோ அதேபோலதான் இதுவும் ஒரு தொழில். அந்தத் தொழிலை கத்துக்க நான் அதுக்கான நேரம் ஒதுக்கணும். பார்க்கிறவங்களுக்கு தவறா தெரிந்தாலும், நான் இந்த துறையில் முன்னேறி வரும் போது நான் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கும். அந்த நாளுக்காகத்தான் இன்று முழு மூச்சாக பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார் சவுமியா.

தொகுப்பு: ஷன்மதி

Related Stories: