டாட்டூ அழிப்பதில் வலியும் வேதனையும் அதிகம்!

நன்றி குங்குமம் தோழி

உலக மக்களின் பல்வேறு பழக்கவழக்கங்களில் பச்சை குத்துதல் என்பதும் தொன்றுதொட்டு இருந்துள்ளது. பனிக்கட்டியில் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 5300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தவராக கருதப்படும் ‘ஓட்ஷி’ (Otzi) என்ற ‘ஐஸ்’ மனிதனின் உடலில் அழியாத மையால் வரையப்பட்ட பல அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. உடலில் தீராத வலி இருக்கும் பகுதிகளில் பச்சைக் குத்திக் கொண்டால் வலி மறையும் என்று பழங்காலத்தில் நம்பப்பட்டது. இயற்கை முறையில் தயாரித்த நிரந்தர பச்சை நிற மையை ஊசியில் தோய்த்து பச்சைக் குத்தினர். இதனை தொழில் தெரிந்தவர்கள் மட்டுமே பாரம்பரியமாக செய்து வந்தனர். நாளடைவில் மருத்துவ காரணங்கள் மறைந்து போய் விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்பமான பெயர்களையோ படங்களையோ பச்சைக் குத்திக் கொண்டனர்.

பச்சைக் குத்துதல் இன்று ‘டாட்டூ’ என்ற பெயரில் நாகரீகத்தின் அடையாளமாக மாறி வருவதை காண முடிகிறது. ஆண்களை விட பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் முருகன், வேல் போன்ற வடிவங்கள், நடிகர்களின் பெயர்கள் மற்றும் படங்களை தங்கள் உடலில் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். காதலர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். டாட்டூ போடுவதை விட அழிப்பதற்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருவதாக கூறுகிறார் டாட்டூ நிபுணர் சூர்யா ரஞ்சித்.

கூடுவாஞ்சேரியில் ‘RS டாட்டூ’ மற்றும் ‘RS பியூட்டி கேர்’ நடத்தி வரும் அவரிடம் பேசியதிலிருந்து…‘‘எங்களிடம் பியூட்டி சர்வீஸுக்கு வருபவர்களை விட டாட்டூ போடவும் அழிக்கவும்தான் வாடிக்கையாளர்கள் அதிகம் வருகிறார்கள். டாட்டூ போடும் போதும், அழிக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டாட்டூ போட முறையாக பயிற்சி பெற்று அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே இதனை போட முடியும். அவர்களிடம் போட்டுக் கொள்வது தான் பாதுகாப்பானது. தோலின் மேற்பகுதியில் ஒரு இன்ச்சுக்கு கீழ் ‘மை’ சென்றால், மை ரத்தத்தில் கலந்துவிடும். தரமான மையினைதான் பயன்படுத்த வேண்டும்’’ என்றவர் டாட்டூ போடும் நடைமுறை குறித்து விவரித்தார்.

‘‘எனக்கு நாகப்பட்டினத்திலுள்ள மாயவரம் தான் சொந்த ஊர். M.Com வரை படித்திருக்கிறேன். சென்னைக்கு வேலை தேடி பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்தோம். முதலில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு சொந்தமாக ஆடிட்டிங் வேலை பார்த்தேன். அதனுடன் GST, கம்பெனி ரிஜிஸ்ட்ரேஷன், MSME சான்றிதழ் என இப்பவும் அந்த வேலை ‘ரைட் சொலுசன்ஸ்’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. என் கணவர்தான் முதலில் கோவாவில் டாட்டூக்கான பயிற்சியினை மேற்கொண்டார். ஒரு வருடப் பயிற்சிக்குப் பிறகு நண்பருடன் இணைந்து கேரளாவில் டாட்டூ ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். சென்னைக்கு வந்த பிறகு இங்கும் ஒன்றை துவங்கினார்.

அவரை தொடர்ந்து நானும் முறையாக டாட்டூ போட கற்றுக் கொண்டேன். டாட்டூ மை கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் வருகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட ஊசியை பயன்படுத்த வேண்டும். டாட்டூ போடும் போது கையுறை பயன்படுத்த வேண்டும். நாங்கள் உலகத்தரமான மையினைதான் பயன்படுத்துகிறோம். டாட்டூ போட்ட ஐந்து நாட்கள் வரை அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது வாஸ்லின் அல்லது தேங்காய் எண்ணெயினை தேய்த்துக் கொள்ளலாம். ஒரு இன்ச்சுக்கு கீழ் ஊசியை செலுத்தினால் தோல் வீக்கமடைந்து புண்ணாகிவிடும்’’ என்றவர் டாட்டூவை அழிக்கும் நடைமுறையை பற்றி விவரிக்கிறார்.

‘இளமை பருவத்தில காதலிக்கும் நபரின் பெயரை டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள். பிறகு காதல் முறிந்ததும், அதை எடுக்கச் சொல்லி வருகிறார்கள். லேசர் மூலம்தான் அதனை எடுக்க முடியும். அதைத் தவிர Q switch, Co2, yag முறையிலும் டாட்டூவை நீக்கலாம். ஆனால், இவை அனைத்தும் விட லேசர்தான் பாதுகாப்பானது. 15 நாட்களுக்கு ஒரு முறை என நான்கு மாதம் தொடர்ந்து வந்தால் தான் தடயம் இல்லாமல் முழுமையாக நீக்க முடியும்.

டாட்டூ போடுவதை விட அதை அழிக்க அதிக செலவாகும். லேசர் சிகிச்சைக்குப் பிறகு நாங்க சொல்லும் மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும். இல்லைனா தழும்பு ஏற்படும். அரசு உத்தியோகத்தில் சேரும் போது டாட்டூ போடக்கூடாது என்பதால், அவர்கள் எங்களை நாடுகிறார்கள். முஸ்லீம்களில் ஒரு சமூகத்தினர் மருதாணி கூட போடக் கூடாது. சில வெளிநாடுகளில் டாட்டூவிற்கு அனுமதியில்லை. நாங்க சொல்வது ஒன்றுதான். முறையான பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சுகாதார முறையில் போடுபவர்களிடம் சென்று டாட்டூ போட்டுக் கொள்ளுங்கள்’’ என்று எச்சரிக்கிறார் சூர்யா ரஞ்சித்.

‘சுயதொழில்தான் பெண்களுக்கு சிறந்தது. எனக்கு அழகியல் சார்ந்து ஆர்வம் இருந்ததால், பிரபல தனியார் அழகு பயிற்சி மையத்தில் மேக்கப் சார்ந்து படிச்சேன். லேசர், ஹைட்ரா போன்ற நவீன சாதனங்கள் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனையும் பயின்றேன். பிரைடல், ஹேர் எக்ஸ்டென்சன்ஸ், நெயில் ஆர்ட், காது ஓட்டை சீரமைப்பு, சோப் மேக்கிங், ஜூவல்லரி மேக்கிங், சாரி பிளீட்டிங், டெய்லரிங், ஆரி வொர்க்ஸ், லிப் டாட்டூ, ஐப்ரோ டாட்டூ என ஒன்பது வருடங்களாக பலவித சர்வீஸ்கள் செய்து வருகிறேன்.

நான் டோர் ஸ்டெப் சர்வீஸும் செய்கிறேன். அழகு நிலையம் பொறுத்தவரை சர்வீஸ் நல்லா கொடுத்தா போதும், வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவாங்க’’ என்றவர், அழகுக் கலை சார்ந்த பயிற்சியும் சான்றிதழுடன் அளித்து வருகிறார்.

தொகுப்பு: கலைச்செல்வி

Related Stories: