கேரளாவில் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு: முதல்வர் பினராயி விஜயன் உள்பட 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டி

 

திருவனந்தபுரம்: கேரளாவில் சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட 14 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 2 முறை கேரளாவில் ஆட்சியில் இருந்த ஒரே கூட்டணி இடதுசாரி கூட்டணி தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இருமுறையும் பினராயி விஜயன் தான் முதல்வராக இருந்தார்.

இம்முறையும் பினராயி விஜயன் தான் முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார். இந்நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இடதுசாரி கூட்டணியில் முக்கிய கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார். இவருடன் இந்திய கால்பந்து வரலாற்றில் முத்திரை பதித்த யு. ஷரப் அலி (சுயேச்சை) போன்ற விளையாட்டு வீரர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். சிபிஎம்மில் முதற்கட்டமாக 81 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆதரவு பெற்ற 6 சுயேச்சைகளும் அடங்குவர்.

11 அமைச்சர்கள் மற்றும் 54 தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஒரு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் (முதலமைச்சர் பினராயி விஜயன்), 4 மத்தியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 4 மாநில செயற்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய குழு உறுப்பினர்கள்: கே.கே. சைலஜா (பேராவூர்), கே.என். பாலகோபால் (கொட்டாரக் கரை), பி. ராஜீவ் (களமசேரி) மற்றும் டி.பி.ராமகிருஷ்ணன் (பேரம்பிரா). மாநில செயற்குழு உறுப்பினர்கள்: பி.ஏ. முகமது ரியாஸ் (பேப்பூர்), வி.என். வாசவன் (ஏற்றுமானூர்), சஜி செரியன் (செங்கன்னூர்) மற்றும் கே.கே. ஜெயச் சந்திரன் (உடும்பன்சோலை).

கொடுவள்ளி, கோட்டக்கல், கொண்டோட்டி, திரூர் மற்றும் பாலக்காடு ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐயில் 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிபிஐயில் கே.ராஜன், சிஞ்சு ராணி, அனில் மற்றும் பிரசாத் ஆகிய நான்கு அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட உடனேயே இடதுசாரி கூட்டணியில் பெரும்பாலானோர் நேற்று மாலையே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். கேரளாவில் பிரச்சாரத்திற்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: