மதுராந்தகம்: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஒரு தனிநபர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால், அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தபாக்கம் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே சென்னையை நோக்கி சென்ற காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த காருக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.15 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர் ந்து, மதுராந்தகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் காரில் ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்து சென்ற நபரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
