சத்தியமங்கலம், மார்ச் 16: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களுக்கு அலுவலர் குழு அமைக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளதால் பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாகரன் தலைமையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜமுனா ராணி மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைப் புளியம்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகங்கள், பவானிசாகர், அரியப்பம்பாளையம் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள தலைவர் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டதோடு, தலைவர்களின் புகைப்படங்களும் மறைக்கப்பட்டுள்ளது.
