சென்னிமலை,மார்ச்9: சென்னிமலையில் புதிய முழுநேர ரேஷன் கடை அமைக்கும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டு காமாட்சி அம்மன் கோயில் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிய முழுநேர ரேஷன் கடை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளின் தொடக்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமை தாங்கினார்.சென்னிமலை ஒன்றிய செயலாளர்கள் செல்வம் (சென்னிமலை மேற்கு), பிரபு (சென்னிமலை கிழக்கு), பேரூர் செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் சௌந்தர்ராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
