×

தமிழ்நாட்டில் இந்த மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு: வணிக பயன்பாட்டு சிலிண்டர் மருத்துவமனை – கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை; மாநில எண்ணெய் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும், வணிக பயன்பாட்டு சிலிண்டரில் மருத்துவமனை – கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநில எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: பெட்ரோல், டீசல் சம்பந்தமாகவும், எல்பிஜி சம்பந்தமாகவும் சொல்கிறேன். முதலில், எம்.எஸ்.எச்.எஸ்.டி. பெட்ரோல் அண்ட் டீசல், மோட்டார் ஸ்பிரிட் அண்ட் டீசல் எடுத்துக் கொண்டால், முதலில் கையிருப்பு, இப்போதைக்கு நம்முடைய சப்ளை செய்கின்ற தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பி.பி.சி., ஐ.ஓ.சி., எச்.பி.சி.னுடைய நிறுவனங்களிலேயே ஸ்டாக் பைப்லைன்ஸ் மூலமும், ரயில் வேகன் மூலமும் வருகிறது.

இன்றிலிருந்து இருப்பே ஒன்பது நாளைக்கு வரும். அது இல்லாமல், தொடர்ந்து பைப்லைனிலும், வேகனிலும், அனைத்து இடங்களிலிருந்து பெற்று கொண்டே இருக்கிறோம். அதனால், இப்போதைக்கு பெட்ரோல், டீசலுக்கு எந்தவிதமான தடையும் இருக்காது. இரண்டு நாட்களாக, குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பம்ப் இருக்கும் இடத்தில் சரியான கூட்டமாக இருந்தது. எல்லோருமே ஒரு நாளைக்கு எடுக்கவேண்டிய அளவை விட இரண்டு மடங்கு பெட்ரோல் பிடித்திருக்கிறார்கள். எங்களுக்கு அதனுடைய புள்ளி விவரங்கள் வந்தபொழுது பார்த்தால், கிட்டத்தட்ட 100 சதவீதம் பெட்ரோல் விற்பனையும், 75 சதவீதம் டீசல் விற்பனையும் ஒரே நாளில் கூடியது. இதுதான் நாம் அச்சமடைவதற்கு காரணம்.

அதற்கடுத்து, வெள்ளிக்கிழமை உடனே குறைந்துவிட்டது. 21 சதவீதம் – 20 சதவீதம் தான். இன்று (நேற்று) காலையில் சில பெட்ரோல் பங்கில் பார்த்தபோது, அதிகமான அளவில் கூட்டமே இல்லை. ஆதலால், இருப்பு நம்மிடம் இருக்கிறது. ஒன்பது நாட்களுக்கு பிறகும், வந்துகொண்டும் இருக்கிறது. இதில் பீதியாக வேண்டிய அவசியமே இல்லை. அனைத்து நிறுவனங்களும் அரசுடன் இணைந்து செயல்பட்டு கண்டிப்பாக நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யப்படும். அடுத்தது எல்பிஜி டொமஸ்டிக் பொறுத்தவரை, ஒன்றிய அரசு அறிவிப்பின்படி 25 நாளைக்கு ஒரு தடவை நகர்ப்புறங்களில் இருக்கின்ற வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர் கொடுக்கப்படும். நம்முடைய சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக தான் இந்த கட்டுப்பாடு. கிராமப்புறப் பகுதிகளில், 45 நாளைக்கு ஒரு முறை. இருப்பு இருக்கிறது.

அரசாங்கமும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த மாதம் முடிகின்ற வரைக்கும் இருப்பு இருக்கிறது. அடுத்தது வணிகம் எரிவாயு – அதாவது வியாபாரங்களுக்கு தரப்படும் எரிவாயு சிலிண்டர்ஸ் நமக்கு ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வரை என்ன போயிக்கொண்டு இருந்ததோ அதை கொடுக்கவேண்டும். ஏனென்றால், வீடுகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். 20 சதவீதம் வரை கொடுக்கலாம் என்று வியாபார நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதிலேயே முன்னுரிமையாக மருத்துவமனை, அனைத்துவிதமான மாணவர்கள் தங்கும் விடுதி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மீதி இருப்பதை ஒன்றிய அரசு, மாநில அரசு குழுவும் இணைந்து, ஆயில் நிறுவனங்கள் எல்லாம் மீதி இருக்கின்ற அளவுகளில் ஒரு முன்னுரிமையை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,State Oil Coordinator ,Annadurai ,Chennai ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...