×

சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கம்: முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை

சென்னை: சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடந்த மாதம் 28ம் தேதி போர் தாக்குதலை தொடங்கியதும், மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானமும், துபாயிலிருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும் கடந்த 28ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு கடந்த 14 நாட்களாக சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா விமான சேவைகள் தொடர்ந்து ரத்தாகி உள்ளன. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டும், அவ்வப்போது சென்னை-துபாய்-சென்னை இடையே, சிறப்பு விமானங்களை இயக்கி கொண்டிருக்கின்றன.

ஆனால் அபுதாபி, குவைத், தோகா, மஸ்கட், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இன்னும் வழக்கமான விமான சேவைகள் தொடங்கப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல், அந்தந்த நாடுகளில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து துபாய்க்கு சிறப்பு விமானம் ஒன்றை இயக்கியது.

சென்னையில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், நள்ளிரவு 12.35 மணிக்கு துபாய் போய் சேர்க்கிறது. அதன் பின்பு இன்று அதிகாலை 2.10 மணிக்கு, துபாயிலிருந்து புறப்பட்டு காலை 6.15 மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்தது. இந்த சிறப்பு விமானங்களில் சுமார் 200 பயணிகள் பயணம் செய்வார்கள் என்றும், ஏற்கனவே ஏர் இந்தியா விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து, விமான சேவைகள் தொடர்ந்து ரத்தானதால் பயணிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air India Express ,Chennai ,Dubai ,Israel ,United States ,Iran ,Middle Eastern ,Gulf ,United Arab Emirates ,
× RELATED ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை...