×

மும்பை, சென்னை உயர் நீதிமன்றங்கள் கைவிட்ட நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி மட்டும் ‘விக்’ அணிவது ஏன்..? காலனித்துவ அடையாளமா அல்லது பெருமையின் சின்னமா?

கொல்கத்தா: இந்தியாவின் பழமையான ஐகோர்ட்டான கொல்கத்தா ஐகோர்ட்டில், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தின் அடையாளமாக கருதப்படும் ‘விக்’ அணியும் முறை இன்றும் ஒரு சடங்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1861ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஐகோர்ட் சட்டத்தின் கீழ், 1862ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது. விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட ராயல் சார்ட்டர் மூலம் உருவாக்கப்பட்ட கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய மூன்று மாகாண நீதிமன்றங்களும் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதப்பட்டன.

அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் மகுடத்தின் பிரதிநிதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ள நீதிபதிகள் சிவப்பு நிற அங்கி மற்றும் வெள்ளை நிறத்திலான முழு ‘விக்’ அணியும் வழக்கத்தை மேற்கொண்டனர். காலப்போக்கில் நாட்டின் பிற நீதிமன்றங்கள் இந்த முறையைக் கைவிட்டாலும், கொல்கத்தா ஐகோர்ட் தனது நீண்டகால பயன்பாட்டின் அடிப்படையில் இந்த மரபைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்பு விழாவில் கூட கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி சுயோய் பால், பாரம்பரிய வெள்ளை நிற விக் மற்றும் சிவப்பு நிற அங்கி அணிந்து பங்கேற்றார். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மும்பை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் இந்த விக் அணியும் முறையை முற்றிலும் கைவிட்டுவிட்ட நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் மட்டும் புதிய தலைமை நீதிபதி அல்லது கவர்னர் பதவி ஏற்கும் போன்ற முக்கிய அரசு விழாக்களில் இன்றும் பின்பற்றி வருகிறது.

இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘தினசரி நீதிமன்றப் பணிகளின் போது இந்த ‘விக்’ அணிவது கிடையாது. இதுபோன்ற மிக முக்கியமான அரசு விழாக்களின் போது மட்டுமே அந்தப் பதவியின் கண்ணியத்தையும், அதன் வரலாற்றுத் தொடர்பையும் வெளிப்படுத்தும் வகையில் நீதிபதிகள் இதனை அணிகிறார்கள். ஒரு நீதிபதியின் தனிப்பட்ட அடையாளத்தை விடுத்து, சட்டமே உயர்ந்தது என்பதை உணர்த்தும் அடையாளமாகவே இந்த நடைமுறை பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய நீதித்துறையில் ‘காலனித்துவ’ நடைமுறை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விவாதங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன.

இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே வக்கீல்களுக்கான உடை விதிகளில் மாற்றங்களைச் செய்து, ‘விக்’ அணிவதை முற்றிலும் நீக்கிவிட்டது. ஆனால், ஐகோர்ட் நீதிபதிகளுக்கான உடை விதிகள் அந்தந்த நீதிமன்றங்களின் தனிப்பட்ட பாரம்பரிய விதிகளின் படியே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. இதன்படி, மற்ற இந்திய ஐகோர்ட்டுகளில் கருப்பு நிற அங்கி மட்டுமே அணியப்படும் நிலையில், கொல்கத்தாவில் மட்டும் விழாக்காலங்களில் சிவப்பு அங்கி மற்றும் விக் பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறினர்.

Tags : Chief Justice ,Kolkata ,Aycourt ,Bombay ,Chennai High Courts ,Kolkata Aycourt ,India ,
× RELATED சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச்...