×

2029ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2027, 2028ல் நடக்கும் 16 மாநில தேர்தலுக்காக மகளிர் 33% இடஒதுக்கீடு சட்டம் மீண்டும் திருத்தம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதை 2029ம் ஆண்டுக்குள் உடனடியாக அமல்படுத்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்ற பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே இந்த ஒதுக்கீடு அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர 2029ம் ஆண்டு வரை தாமதமாகும் சூழல் நிலவியது. அப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதனை இணைப்பது தேவையற்றது என்றும், இந்த அறிவிப்பு வெறும் வெற்று வாக்குறுதி என்றும் குற்றம் சாட்டி வந்தன.

தற்போது இந்த இடஒதுக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய நடைமுறைகளுடன் இணைக்காமல் தனியாக பிரித்து அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2027ம் ஆண்டு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தல்களிலும், 2028ம் ஆண்டில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 9 மாநிலங்களிலும் பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல் 2029ம் ஆண்டில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஆகிய மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத்தேர்தலிலும் இடஒதுக்கீட்டை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறைக்கு காத்திருக்காமல், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய குலுக்கல் முறையை பயன்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில்,
‘மசோதாவில் இவ்வளவு முக்கியமான மாற்றங்களைச் செய்யும் போது ரகசியமான முறையில் செயல்படாமல் வெளிப்படைத்தன்மையுடன் ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முறைசாரா முறையில் தகவல் அனுப்புவதை தவிர்த்துவிட்டு, முறைப்படி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். 2023ம் ஆண்டு இந்த மசோதா அறிமுகமான போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு நிபந்தனையை நீக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். தற்போது சுழற்சி முறையில் இடங்களை ஒதுக்குவது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது போன்ற தொழில்நுட்ப ரீதியான விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு கோரியுள்ளார். தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியில் இந்த முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

2029ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு, அவசர கதியில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற நீண்டகால திட்டங்களை புறக்கணித்துவிட்டு, வெறும் குலுக்கல் முறையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முயற்சிப்பது தேர்தல் ஆதாயத்திற்கான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தில் திருத்தம் செய்யும்போது வெளிப்படைத்தன்மை இல்லையெனில், அது ஜனநாயக முறைக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags : Congress ,NEW DELHI ,EU government ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...