×

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீதும், வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்துவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், காஸ் சிலிண்டர்களின் விநியோகம் குறித்து அவசர ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள், தற்போது போதுமான அளவு அரசின் கையிருப்பில் இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை.

பொதுமக்கள் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பெற்ற நாளில் இருந்து, 25 நாட்களுக்கு பிறகு உரிய வழிகாட்டுதலின்படி, (பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மூலம்) காஸ் சிலிண்டரை பதிவு செய்த தேதியில் இருந்து மூன்று தினங்களுக்குள் புதிய சிலிண்டர் விநியோகிக்கப்படும். காஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம். இது குறித்து ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன் வாயிலாகவும் வதந்திகள் பரப்புவோர் மீதும், காஸ் சிலிண்டர்களை பதுக்குவோர் மீதும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், காஸ் முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri ,Dinesh Kumar ,Krishnagiri district ,Krishnagiri District Food Supply and Consumer Protection… ,
× RELATED கிருஷ்ணகிரிக்கு நாளை துணை முதல்வர் வருகை