செய்துங்கநல்லூர், மார்ச் 14: நெல்லை – திருச்செந்தூர் சாலையில் உள்ள செய்துங்கநல்லூரில் மாவட்ட எல்லைப் பகுதி சோதனை சாவடியை ஒட்டி பேரிகார்டும், இதே சாலையில் செய்துங்கநல்லூர் காவல் நிலையம் அருகே 2வது பேரிகார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2வது பேரிகார்டில் இருந்து 100 அடி தூரத்தில் வாரச்சந்தை கூடும் இடத்தில் மற்றொரு பேரிகார்டு கடந்த ஓராண்டாக வைக்கப்பட்டிருந்தது. இந்த பேரிகார்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே வாரச்சந்தை அருகில் உள்ள பேரிகார்டை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து கடந்த 9ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செய்துங்கநல்லூர் வாரச்சந்தை அருகில் இருந்த பேரிகார்டை போலீசார் அதிரடியாக அகற்றினர். இதன் காரணமாக இப்பகுதியில் எந்த இடையூறும் இன்றி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து செய்துங்கநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேரிகார்டு குறித்து செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
