கடலூர் : கடலூரில் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், கடலூர் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் டிரைவர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான கேட் கீப்பர் பங்கஜ் குமார், ரயில் நிலைய மேலாளர் உடன் பேசிய ஆடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் கூறியது பதிவாகியிருந்தது. இதனிடையே தனக்கு குரல் பதிவு செய்யக்கூடாது என பங்கஜ் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், வரும் 27ம் தேதி குரல் பரிசோதனை செய்ய சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தனக்கு தமிழ், ஆங்கிலம் தெரியாததால் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து நகல்களையும் இந்தியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்ற அவரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
