விகேபுரம், மார்ச் 13: பாபநாசம் வனத்துறை சூழல் மேம்பாட்டு கோட்டம் சார்பில் கிராம வனக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சூழல் மேம்பாட்டு அலுவலர் ஹேமலதா தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார. கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் முருகன், அம்பை துணை இயக்குநர் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்ற உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதைதொடர்ந்து அவர், 6 கிராம வனக்குழுவிலுள்ள 64 உறுப்பினர்களுக்கு ரூ.33.65 லட்சம் மாற்று தொழிலுதவி கடன் உதவி வழங்கினார். தொடர்ந்து, கிராம வனக்குழு பெண் உறுப்பினர்கள் 9 பேருக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அம்பை சூழல் சரக உதவி வன உயிரின காப்பாளர் சக்தி பிரசாத், கதிர் காமன் வரவேற்றனர். வனவர் மற்றும் பதவி வழி செயலாளர் மோகன் நன்றி கூறினார்.
