விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம், மார்ச் 13: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் அருகே வி.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் குஜன்(26). இவர் கடந்த 2021 மே 2ம் தேதி 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் குஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட குஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

Related Stories: