சேலம்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போர் தொடுத்துள்ளதால், ஐரோப்பிய வளைகுடா நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், அவ்வழியே கச்சா எண்ணெய் லோடு ஏற்றிய கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு எல்பிஜி காஸ் சிலிண்டர்கள் நிரப்பும் திரவ சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் எரிபொருள் கொள்முதல், சவுதிஅரேபியா, கத்தார், குவைத் நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அது பாதிப்படைந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் சப்ளையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களும் நிறுத்தியுள்ளன.
அதேவேளையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டதன் பேரில், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இந்த வீட்டு சமையல் சிலிண்டர் விநியோகம் என்பது இன்னும் 2 வாரங்களுக்கு எவ்வித பிரச்னையும் இன்றி நடக்கும் என்றும், அதன் பிறகும் கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்டுகளில் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், விநியோகத்தில் பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளனர். இதனால், காஸ் ஏஜென்சிகளுக்கு சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில், சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற தகவல் பரவியதால், அந்தந்த பகுதிகளில் உள்ள காஸ் ஏஜென்சிகளை மக்கள் முற்றுகையிட்டு, சிலிண்டர்கள் கேட்டு வருகின்றனர்.
இச்சூழலில் தமிழ்நாட்டில் சென்னை எண்ணூர், செங்கல்பட்டு, சேலம் கருப்பூர், ஈரோடு பெருந்துறை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய 10 இடங்களில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் காஸ் பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் முதல் காஸ் ஏஜென்சிகளுக்கு வீட்டு சமையல் சிலிண்டர் சப்ளையை 20 சதவீதம் குறைத்து, 80 சதவீதமாக வழங்கி வருகின்றனர்.
அதாவது, ஒரு ஏஜென்சி 1000 சிலிண்டர் வாங்கி வந்தநிலையில், அந்த ஏஜென்சிக்கு தற்போது 800 சிலிண்டர் மட்டுமே வழங்குகின்றனர். அதுவும் கடந்த 2 மாதமாக ஒவ்வொரு காஸ் ஏஜென்சியும் எத்தனை சிலிண்டர்களை வாங்கி விநியோகம் செய்தது என்ற பட்டியலை எடுத்து, அதன் சராசரியை கொண்டு சப்ளையை 20 சதவீதம் குறைத்துள்ளனர்.
அதேவேளையில், கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் சமையல் சிலிண்டர் புக்கிங் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால், மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர் புக்கிங் செய்கின்றனர். வழக்கமாக புக்கிங் செய்யும் எண்கள் சரிவர எடுக்காததால், ஏஜென்சிகளை முற்றுகையிட்டும் வருகின்றனர்.
இதனால் இண்டேன் நிறுவனம், புதிய புக்கிங் எண்களை வெளியிட்டது. அதிலும் தற்போது மக்கள் அதிகளவு புக்கிங் செய்கின்றனர். இப்படி புக்கிங் அதிகரித்திருக்கும் நிலையில், சிலிண்டர் சப்ளையை 20 சதவீதத்தை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருப்பதால், விநியோகஸ்தர்கள் கடுமையாக திணறி வருகின்றனர். வட மாநிலங்களில் காஸ் ஏஜென்சிகளை மக்கள் சூறையாடும் நிலையில், அத்தகைய நிலை இங்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சப்ளையை வழக்கம் போல் வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
* நேராக வந்து சிலிண்டர் வாங்கிச்செல்லும் மக்கள்
சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் சிலிண்டர் புக்கிங் செய்த பொதுமக்கள், காஸ் ஏஜென்சிகளுக்கு படையெடுக்கின்றனர். சிலிண்டர் சப்ளைக்கு ஒருநாள் தாமதமானாலும் நேரடியாக சென்றுவிடுகின்றனர். நேற்றைய தினம் பெரும்பாலான இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சிகளுக்கு மக்கள் நேரடியாக வந்து, தாங்கள் புக்கிங் செய்த சிலிண்டர்களை வாங்கிச் சென்றனர்.
* சேலம் பிளாண்டில் இருந்து சென்னைக்கு சிலிண்டர் சப்ளை
சேலம் கருப்பூர் ஐஓசிஎல் காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் பிளாண்டில் தினமும் 18 ஆயிரம் சிலிண்டர்கள் நிரப்பப்படுகிறது. இங்கிருந்து வழக்கமாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இண்டேன் சிலிண்டர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக சென்னைக்கு சேலம் பிளாண்டில் இருந்து சிலிண்டர் லோடு அனுப்புகின்றனர். கடந்த 4 நாட்களாக தினமும் 15 முதல் 20 லோடு சிலிண்டர் (சுமார் 6,000 சிலிண்டர்) சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோக சேலம் மாவட்டத்திற்கு ஈரோடு பெருந்துறை பிளாண்டில் இருந்து இண்டேன் சிலிண்டர் கொண்டு வரப்படுகிறது.
