சென்னை: கள்ளச்சந்தையில் ஒரு காஸ் சிலிண்டர் ரூ.5ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால், சென்னையில் டீ, காபி விலையை கடை உரிமையாளர்கள் இரட்டிப்பாக உயர்த்தி விட்டனர். இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக சிலிண்டர் பாதிப்பு என தொடங்கி தற்போது வீட்டு சிலிண்டர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளதால் வீடுகளில் சமைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக சிலிண்டர் பாதிப்பு டீ கடைகளையும் விட்டு வைக்கவில்லை. சிலிண்டர் ஸ்டாக் வைத்திருந்தவர்கள் போண்டோ, வடை போட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் முதல் அதையும் நிறுத்தி விட்டனர். என்ன என்று கேட்டால், சிலிண்டர் வந்தால் தான் இனி போண்டா என்று கூறுகின்றனர். அடுத்ததாக, சிலிண்டர் வந்தால் மட்டுமே டீ, காபி போட முடியும் என்ற குண்டை தூக்கி போட்டனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை சென்னையில் பெரும்பாலான கடைகளில் டீ ரூ.20, காபி ரூ.25 என விற்பனை செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
