×

காளை யாரு… கரடி யாரு… நாய் யாரு? பாஜ, எடப்பாடியை கலாய்த்த சசிகலா

திண்டிவனத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி சசிகலா பேசுகையில், ‘இந்நேரத்தில் ஒரு குட்டி கதையை என் நினைவுக்கு வருகிறது. அதாவது, கரை சேர நினைத்த மனிதர்களின் கதை இது. ஒரு ஊர்ல ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இக்கரையில ரெண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அக்கரைக்கு செல்வதற்கு ஓடமும் இல்லை. இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அது ஆற்றில் பாய்ந்து நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஒருத்தர் ஆற்றில் குதித்து, அந்த காளை மாட்டின் வாலை கெட்டியாக பிடித்துக் கொண்டார். காளை மாடு சுலபமாக அவரை இழுத்து சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவர் பார்த்தார், நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று? அப்போது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவரும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலை பிடித்துக் கொண்டு சென்றார்.

கனமான மனிதனை இழுத்துக்கொண்டு நாயால் நீந்த முடியவில்லை, திணறியது. அவர்கள் போக வேண்டிய திசை வேறு, போய்க்கொண்டிருந்த திசை வேறு. இதில் மூன்றாவதாக ஒரு ரகம் இருக்கிறது. ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்தி சென்று அதை பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் அவன் கரை திரும்பவில்லை. கரையில் இருப்பவர்கள் கத்துகிறார்கள், அதை விட்டுவிடு என்று, அவன் நடு ஆற்றில் இருந்து கத்துகிறான், நான் இதை எப்பவோ விட்டுட்டேன், இப்ப இது (கரடி குட்டி) என்னை விடமாட்டேங்குது. எனவே தவறாக பற்றுகிறவர்கள் தடுமாறி போகிறார்கள். நீங்கள் எல்லாம் இந்த காளையின் வாலை பிடித்துக் கொண்டே இருக்கிறீர்கள், கண்டிப்பாக கரை சேர்ந்து விடுவீர்கள்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு நமது தொண்டர்கள் ஆதரவோடு தமிழக மக்களின் நலன் காப்போம். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டசபை தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து வெற்றிவாகை சூடுவோம். இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார். இந்த கதையில் காளை மாடு சசிகலா என்றால், கரடி பாஜ என்றும், அதைபிடிதிருப்பவர் பழனிசாமி என்றும் தொண்டர்கள் புது விளக்கத்தை கொடுத்து சென்றனர்.

Tags : Sasikala ,BJP ,Edapadi ,Iftar ,program ,Tindivanam ,
× RELATED அதிமுகவுக்கு செல்வாக்குள்ள...