×

பூட்டைப் பார்க்காதீர்கள் சாவியைத் தேடுங்கள்

பொழுது விடிந்து பொழுது போனால் பிரச்னை… பிரச்னை… பிரச்னையால் வரும் கவலைகள்.கவியரசு கண்ணதாசன் ‘‘கவலை இல்லாத மனிதன்’’ என்று ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் வந்த பிரச்னைகளால் அவருக்கு ஏகப்பட்ட கவலை வந்தது என்பதை அவருடைய சுயசரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார்.அப்பொழுது அவர் ஒரு வார்த்தையை நிறைவாகச் சொல்லுகின்றார்.கவலையில்லாத மனிதன் என்ற தலைப்பே தவறு. கவலையில்லாமல் ஒரு மனிதன் இருக்க முடியுமா? அது யதார்த்தத்திற்குப் பொருந்தாது என்பது அந்தப் படம் எடுத்த பிறகுதான் எனக்கு அனுபவபூர்வமாகத் தெரிந்தது என்பார்.வாழ்க்கையின் பிரச்னைகள் வித்தியாசமானவை. வலிகளும் அனுபவங்களும் சில நேரங்களில் தீர்வுகளும் வித்தியாசமானவை.

திருமணம் ஆகவில்லையே என்ற கவலை சிலருக்கு. அதே நேரத்தில். ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று நினைப் பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா!விவாகரத்து நடக்கக்கூடிய நடுவர் மன்றங்களில் போய் பேசிப் பார்த்தால் தெரியும். இத்தனை அலைச்சல் வழக்கு செலவு. நிம்மதியின்மை. இதற்குத் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்போல் இருக்கிறது என்று புலம்புவார்கள்..ஆனால் அதே நேரத்தில் தகுந்த பெண் கிடைக்கவில்லையே, மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்று தவியாய்த் தவிப்பவர்களும் இருக்கிறார்கள்.ஒரே பிரச்னைதான். வெவ்வேறு கோணங்கள், வெவ்வேறு பரிணாமங்கள், வெவ்வேறு விளைவுகள்.வாழ்வில் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய அறிவியல் முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கான படிப்பு இருக்கிறது. ஆராய்ச்சி இருக்கிறது. முதலில் அறிவியல் முறைகள் எப்படிப் பிரச்னை களுக்கான தீர்வைச் சொல்லுகின்றன என்பதைப் பார்ப்போம்.வாழ்வின் பிரச்னைகள் எல்லோருக்கும் வரும். ஆனால், அவற்றை சமாளிக்கும் விதமே நம்மை வலுவானவர்களாக மாற்றுகிறது என்று சொல்லும் அறிவியல் முறை பிரச்னைகள் தீர சில நடைமுறை வழிகளைப் பரிந்துரைக்கிறது.

தெளிவாக அடையாளம் காணுங்கள் எது உண்மையான பிரச்னை?

நிதி, உறவு, வேலை, உடல்நலம், அல்லது மன அழுத்தமா? என்பது பற்றிய புரிதல் முதலில் முக்கியம். பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது அதைப்பற்றிய தெளிவு இல்லாமல் தீர்வு காண்பது இயலாத காரியம். கவலையோடு இருக்கக்கூடிய ஒரு நண்பரிடம் ஒருமுறை கேட்டேன். ‘‘என்ன பிரச்னை உங்களுக்கு? சொல்லுங்கள் ஒரு தீர்வு காணலாம்’’ அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு முன்னைவிட சோகத்தோடு சொன்னார். ‘‘எந்தப் பிரச்னை என்று நான் சொல்லுவேன்? ஒன்றா இரண்டா?’’ என்றார். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது கூட தெரியாமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். பிரச்னை என்ன என்ற தெளிவு கிடைத்தால் தீர்வு பாதி கிடைத்துவிடும்.

ஏற்றுக்கொள்வது முக்கியம்

எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து விடலாம் என்று நினைப்பதும் தவறு. சில உடற் குறைகள் மருத்துவத்தால் கூட தீர்க்க முடியாததாக இருக்கும். அப்பொழுது ஒரே வழி அதை ஏற்றுக் கொண்டு அதற்கு தோதாக வாழ கற்றுக் கொள்வதுதான். விரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பு என்றார்கள். அதாவது கிடைத்ததை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள் என்பார்கள். ஒரு நண்பருக்கு மிகவும் அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதற்காக பல பெண்களை அந்தக் காலத்தில் பார்த்தார். ஏதோ ஒரு குறை என்று பல பெண்களை நிராகரித்தார். கடைசியில் இவர் எதிர்பார்த்தபடி இல்லாத ஒரு பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பெண்ணை நேசிக்க ஆரம்பித்தாள். அந்தப் பெண்ணும் இவரைப் புரிந்து கொண்டு வாழ ஆரம்பித்தாள். வாழ்க்கை அற்புதமாகச் சென்றது. இப்பொழுது அவர் சொல்லும் வார்த்தை ‘‘என் மனைவியை விட அழகானவள் யாரும் இல்லை’’… தனக்குக் கிடைத்த மனைவியை நேசிக்க தொடங்குகின்ற பொழுது, அவள் அழகானவளாகத் தெரிவாள்.சில நேரங்களில் ‘‘as it is’’ ஏற்றுக்கொள்வது மன அமைதியை தரும்.

அவசரம் கூடாது

நாம் பெரும்பாலான நேரத்தில் அவசரப்படுகிறோம். எதுவாக இருந்தாலும் அது உடனடியாகக் கிடைத்துவிட வேண்டும் என்ற நினைக்கிறோம். ஒரு நோய் சில நிமிடங்களில் வந்துவிடும். ஆனால், தீர்வதற்கு வெகு காலமாகும். ஒரு நண்பர் நன்றாக நடந்து கொண்டிருந்தவர் எதிர்பாராமல் ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தார். இரண்டு வினாடிகள் தான். எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. ஆனால், பழையபடி நடப்பதற்கு மூன்று மாதத்திற்கு மேல் ஆகியது. அவர் வைத்தியம் பார்த்துக் கொண்டார். நடைப்பயிற்சியை மேற் கொண்டார். அப்படித்தான் அவருடைய பிரச்னை தீர்ந்தது. முதலிலே பிரச்னைகளை பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றாக சிறிது சிறிதாக தீர்த்துக் கொண்டே வரவேண்டும். சிக்கலான நூல் கண்டைப் பிரிக்கும் போது அவசரப்பட்டால் மேலும் சிக்கலாகிவிடும். பிரச்னைகள் தீர்ப்பதில் பொறுமையும், படிப்படியாக அதை எப்படித் தீர்க்க வேண்டும் என்கிற தெளிவும் அவசியம். பெரிய பிரச்னையை சிறிய செயல்களில் உடையுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் (progress) காணுங்கள்.

உறவுகள்

உறவுகள் மிகப் பெரிய ஆதாரம்.குடும்பம், நண்பர்கள், அல்லது வழிகாட்டிகள் உதவலாம்.

மன அமைதிக்கான பயிற்சிகள்

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தைத் குறைக்கும். தேவையானால் மனநல ஆலோசகர் அல்லது நம்பகமான ஒருவரிடம் பேசுவது பல நேரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை தரும். நினைவில் கொள்ளுங்கள்: பிரச்னை என்பது முடிவு அல்ல, அது ஒரு பாடம்.சில நேரங்களில் பிரச்னைக்கு உள்ளேயே தீர்வு இருக்கும். வெளியில் எத்தனைத் தேடினாலும் கிடைக்காது.ஒருவர் வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தி இருந்தது. பூட்டு போட்டு போய்விட்டார்கள் என்று எண்ணி சாவியைத் தேடினார். அவருக்கு வேர்த்தது. அவசரப்பட்டார். கடைசியில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நினைத்து ஒரு நண்பரை உதவிக்காக அழைத்தார். அவர் பூட்டை திறக்கக்கூடிய நபரை அழைத்துக்கொண்டு விரைந்து வந்தார்.

வந்தவர் கதவின் பூட்டைச் சோதிப்பதற்காக கதவின் மீது கை வைத்தார். கதவு திறந்தது. காரணம் அது பூட்டப் படாமலேயே இருந்தது. மிகப்பெரிய பிரச்னையாக நினைத்தது எளிதாகத் தீர்ந்தது. பிரச்னையின் தீர்வு பிரச்னைக்குள்ளேயே இருந்தது.ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பிரச்னைகளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, தீர்வுகளை சிந்திப்பதில்லை. பூட்டி விட்டாரே என்று நினைக்கிறோமே தவிர சாவியைத் தேடுவதில்லை. பல நேரங்களில் சாவியை கையில் வைத்துக் கொண்டு பூட்டை உடைத்து விடுகின்றோம்.சரி இந்தப் பிரச்னைக்கும், தீர்வுக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். இருக்கிறது. ஆன்மிகத்தின் அடிப் படையான பயிற்சி என்பது பிரச்னைகளுக்கான தீர்வைத் தேடுவதுதான்.அதற்கான தெளிவுக்குத் தான் பிரார்த்தனையும் தெய்வமும் ஆன்மிகமும்.

Tags : Kaviarasu Kannadasan ,
× RELATED தாயாகி வந்து கருணை கூட்டும் நாயகி