×

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

காஞ்சிபுரம்

பகுதி 16

[கச்சபாலயம், திருமேற்றளி, திருவெஃகா]

கச்சி ஏகம்பர், காஞ்சி காமாட்சி, குமரக்கோட்டம் முதலான கோயில்களைத் தரிசித்த பின் காஞ்சி கச்சபேஸ்வரர் கோயிலை நோக்கி வருகிறோம். [கச்சபாலயம் என்றும் கூறுவதுண்டு]. இக்கோயில் காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியின் தென்கோடியில் உயர்ந்த ராஜகோபுரத்துடன் திகழ்கிறது. அருணகிரியார் இத்தலத் திருப்புகழில், “கச்சிக் கச்சாலை” என்று குறிப்பிடுகிறார். கச்சபம் = ஆமை. இறைவன் கச்சபேஸ்வரர். இப்பெயருக்கான காரணத்தைப் புராணக் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.

முன்பொரு சமயம் இந்திரன் ஜம்பாசுரன் எனும் கொடிய அரக்கனைக் கொன்று வெற்றிவாகை சூடி, ஐராவதத்தின் மேல் அமர்ந்து வந்து கொண்டிருந்தான். எதிரில் வந்த துர்வாச முனிவர் ஒரு நறுமலர் மாலையை அவனுக்கு அளிக்க, இந்திரன், அதை அலட்சியமாக எடுத்து ஐராவதத்திற்கு அணிவித்தான். அதிலிருந்த வண்டுகளின் தொல்லை தாங்காத ஐராவதம், அம்மாலையைக் காலின் கீழே போட்டுத் துவைத்தது. வெற்றி பெற்ற ஆணவத்தினால் தன்னை அவமதித்த இந்திரனை விட்டு, அஷ்ட லட்சுமிகளும் நீங்குமாறு சபித்தார் துர்வாசர். அதனால் அனைத்துச் செல்வங்களும் அவனை விட்டு நீங்கி பாற்கடலுள் மறைந்தன.

சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தான் இந்திரன். ஆணவம் அழிந்த தேவேந்திரன் இழந்த செல்வங்களை மீட்கப், பாற்கடலைக் கடையும் படிக் கூறினார். மேரு மலையை மத்தாகவும் வாசுகியை நாணாகவும் கொண்டு, தேவர்கள் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கியபோது, மலை கடலில் ஆழ்ந்து விடாமலிருக்க, திருமால் கூர்மாவதாரம் எடுத்து, ஆமை வடிவில் தம் முதுகில் மலையைத் தாங்கினார்.

ஆனால், மலையுடன் உராயும் போது, வாசுகி கக்கிய விஷ ஜ்வாலையின் வெப்பத்தினால் திருமாலின் மேனி கறுத்தது. கச்சபமும் கடலைக் கலங்கச் செய்யவே, கடல் வாழ் ஜீவராசிகளுக்குத் துன்பம் நேரிட்டது. சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு அமைதி ஏற்படுத்தினார். இருப்பினும், தான் கடலைக் கடைந்த போது, பிராணிகளுக்குத் துன்பம் ஏற்பட்டதை எண்ணி வருந்தி, திருமால் காஞ்சியில் சிவனாரைப் பூஜித்தார்.ஆமை பூஜித்ததால் இறைவன் கச்சபேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

“பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக் கச்சபத்திச்சைப்
படுக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே”என்கிறார்.
[படங்களின் வரிசையையும், கூட்டமான புள்ளிகளையும் கொண்ட ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்ட, கச்சப (ஆமை) உரு எடுத்த திருமால் ஆசைப்பட்டுள்ள கச்சி நகரில் அழகிய பெருமாளே!]தம் முதல் பாடலான, ‘முத்தைத்தரு’ எனத் தொடங்கும் திருப்புகழிலேயே “ஒற்றைக் கிரி மத்தைப் பொருது” என்று திருமால் தேவர்களுடன் மேரு மலையை மத்தாக வைத்துக் கடைந்த குறிப்பை வைத்துள்ளார் அருணகிரியார்.

‘மக்கட்கு’ எனத் தொடங்கும் கச்சபேசர் ஆலயத் திருப்புகழில்,

‘செக்கண் சக்ராயுத மாதுலன்
மெச்சப் புற் போது படாவிய
திக்குப்பொற் பூதரமே முதல் வெகுரூபம்
சிட்டித்துப் பூத பசாசுகள்
கைக்கொட்டிட்டாட மகோததி
செற்(று) உக்ரச் சூரனை மார்பக முது சோரி
கக்கக் கைத் தாமரை வேல்விடு

செச்சைக் கர்ப்பூர புயாசல
கச்சுற்றப் பார பயோதர முலையாள் முன்
கற்புத் தப்பா(து) உலகேழையும்
ஒக்கப் பெற்றாள் விளையாடிய
கச்சிக் கச்சாலையில் மேவிய பெருமாளே’
– என்று பாடுகிறார்.

[செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமனாம் திருமால் புகழும்படி, புல்லும் மலரும் படர்ந்து வளர்வதும், எல்லாத் திசைகளிலும் பொன்னொளி வீசுவதுமான மேரு மலை முதலான பலப்பல உருவங்களை உண்டாக்கி, பூதங்களும் பேய்களும் கைகொட்டிக் கொண்டாடுமாறு பெரிய கடலை வற்றச் செய்து, கடும் கோபம் கொண்ட சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் வெளிவருமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தால் வேலாயுதத்தை விடுகின்ற, செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசப்பட்ட மலைபோன்ற தோள்களை உடையவனே! கச்சு அணிந்த, மிகுதியாகப் பால் ஊறும் மார்பினை உடையவளும், முற்காலத்தில், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சியம்மன் பல திருவிளையாடல்களை நிகழ்த்திய காஞ்சிபுரத்தில் உள்ள ‘‘கச்சபேஸ்வரம்” என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையனே!] [கச்சிக் கச்சாலை = காஞ்சிப் பதியிலுள்ள கச்சபேஸ்வரரின் ‘கச்சபாலயம்’ எனப்படும் திருக்கோயில்] கோயிலில் மகிமை வாய்ந்த இஷ்ட சித்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது.

இக்குளத்தின் நான்கு படித்துறைகள் நான்கு வித பலன்களைத் தரக்கூடியவை என்பர். அவை தர்ம சித்தி, அர்த்த சித்தி, காம சித்தி, மோட்ச சித்தி என்பன (அறம், பொருள், இன்பம், வீடு). நடுப்பகுதி இஷ்ட சித்தி எனப்படுகிறது. கோயில் வளாகத்தில் நுழைந்ததும் பெரிய திறந்த வெளியைக் காண்கிறோம். தொலைவில் இடப்புறத்தில் தனி விஷ்ணு துர்கை சந்நிதி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

பஞ்சசந்தி விநாயகர், பலிபீடம், கொடிமரம், நந்தி வணங்கி கோயிலுக்குள் செல்கிறோம். ஞானசித்தீஸ்வரர், நடராஜர் இவர்களுடன் வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகப் பெருமானையும் வணங்குகிறோம். உள்ளே சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். லிங்கத்தின் மேற்புறம் சற்று கூர்த்து விளங்குகிறது.

பின்புறம் சிவன் பார்வதி தோற்றம் அளிக்கின்றனர். கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோரையும், மூலையில் வலம்புரி, இடம்புரி விநாயகர்களையும் கண்டு வணங்குகிறோம். 108 சிவ லிங்கங்கள், 1008 லிங்கங்கள், பஞ்ச பூத லிங்கங்கள் தவிரவும் கைலாசநாதர், திருமுறை கண்ட பொல்லாப் பிள்ளையார், வள்ளி தெய்வயானையுடன் திருப்பரங்குன்ற முருகன், தேவியருடன் கூடிய ஷண்முகர், அருகில் வழக்கமாக காணப்படும் கஜாலட்சுமிக்குப் பதிலாக சரஸ்வதி தேவி இவர்களைத் தரிசிக்கிறோம். நவக்கிரஹ சந்நதியும் உள்ளது.

வெளிப்பிராகாரத்தில் சுந்தராம்பாள் சமேத கச்சபேஸ்வரர் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கலாம். காமாட்சி பேரரசியாய் விளங்கும் காஞ்சிபுரத்தின் சிவாலயங்களில்
அம்பிகைக்கெனத் தனிச்சந்நதி கிடையாது.

இதுவரை குறிப்பிட்ட கோயில்களன்றி,

1. காஞ்சி பிள்ளையார் பாளையம் திருமேற்றளி
2. திருவெஃகா  ஆகிய இரு கோயில்கள் தொடர்பான இரு நிகழ்ச்சிகளையும் திருப்புகழில் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

திருமேற்றளி

“புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும் பெருமாளே”
[புகழப்படும் கொண்டல் ஆகிய மேக நிறத் திருமாலுக்கு வீடு பேறு அளித்த
பெருமாளே!]
திருமால் சிவசாரூப நிலையைப் பெறவேண்டி இறைவனை வழிபட்ட திருத் தலம் திருமேற்றளி. சிவனார் காட்சி அளித்தபோது, திருமால் சிவசாரூப நிலையை வேண்ட, முருகன் ஞானசம்பந்தராக இங்கு வருகை தந்து பதிகம் பாடும்போது, அது கிட்டும் என்றும், அதுவரை இங்கிருந்து தவம் செய்யுமாறும் இறைவர் வரமளித்தார். அதன்படியே முருகன் ஞானசம்பந்தராக திருவவதாரம் செய்துற்ற காலத்தில், கச்சித் திருமேற்றளியில் தவம் செய்துகொண்டிருந்த திருமாலுக்கு சிவசாரூபம் அளித்தார்.

“முத்தமிழ் விரகர் பாட்டலங்கலாற் பரஞ்சுடர் திருவுருப் பெற்றான்.”
“முருகப் புத்தேள் அருள்விழிப் பார்வை தன்னால் மேற்றளியில் முகுந்தன் ஓர் இலிங்கமானான்”
– காஞ்சிப் புராணம், திருமேற்றளிப் படலம், அந்தர்வேதிப் படலம்
சோதி காட்ட வராச்சுத நாதனார்க் கருள் போற்றிய
தூரிதாப் பரமார்த்தமது அருள்வாயே”
ஏகமாய்ப்பல – பொதுத் திருப்புகழ்
[ஒளிவளர் உண்மையை அடியேனுக்குக் காட்ட நீ சம்பந்தப் பெருமானாய் சிவசாரூபம் வேண்டித் தவமிருந்த திருமாலுக்கு அருள்பாலித்ததும், எட்டாததுமான மேலான பொருளை உபதேசித்தருளுக].

திருவெஃகா

காஞ்சியில் திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் என்பவர் பணிவிடை செய்து வந்தார். ஒரு வயதான பெண், ஆழ்வார் இருந்த இடத்தில் சுத்தம் செய்யும் கைங்கரியங்கள் செய்துவந்தாள். ஆழ்வார் அனுக்ரஹத்தில், பெருமாளின் திருவிளையாடல் காரணமாக, அவள் முதுமை நீங்கப் பெற்று இளமை வாய்ந்த பெண்ணாக மாறினாள். அரசன் அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்டதோடு, தானும் இளமை அடைவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று ஆராய்ந்தான். அவன் திருமழிசை ஆழ்வாரை அழைத்துவரச் சொன்ன போது, கணிகண்ணன் மறுத்துவிட்டான். கணிகண்ணனும் ஒரு வரகவி என்று கேள்விபட்ட அரசன், தன்னைப் புகழ்ந்து பாடுமாறு அவனுக்கு ஆணையிட்டான். கணிகண்ணனோ, தான் ‘நரஸ்துதி செய்ய மாட்டேன், நாராயணனைத் தான் போற்றுவேன்’ என்று கூறி,

“ஆடவர்கள் எங்ஙன் அகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றார் பொழிற் கச்சி மாண்பு”
– என்று பாடினான்.

இதைக் கேட்ட அரசன், ‘நம்மைப் பாடு என்றால், நகரத்தைப் பாடுகிறாயே’ என்று கோபமுற்று, ‘இவ்வூரை விட்டுப் போய்விடு’ என்று விரட்டினான்.செய்தி அறிந்த ஆழ்வார், ‘நாமும் உன்னுடன் வருகிறோம்; பெருமாளையும் அழைத்துக்கொண்டு போய்விடுவோம்’ என்று கூறிப் பின்வருமாறு பாடினார்.

“கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்”

[எந்தக் காட்டில் சென்று தங்கப்போகிறோமோ, பாவம் பெருமாள் அவருக்கு இதமான நல்ல படுக்கையாவது இருக்கட்டும் என்று எண்ணினார் போலும் ஆழ்வார்!]
பெருமாள் அவர் பேச்சைக் கேட்டுத் தானும் அவ்விருவருடன் புறப்பட்டு விட்டார். மூவரும் ஊரை விட்டு விலக, காஞ்சி நகரமே இருளடைந்து விட்டது. அரசன் நடுங்கிப்போய், கணிகண்ணனிடம் ஓடி வந்து, தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இதை ஆழ்வாரிடம் கணிகண்ணன் கூற, அவரும் முன் தான் பாடிய பாட்டை,

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் விரித்துக்கொள்.”
– என்று மாற்றிப் பாடினார். பின் மூவரும் சேர்ந்து காஞ்சி திரும்பினார்.

ஆழ்வார் சொன்னபடி செய்ததனால், பெருமாளுக்கு, “யதோத்காரி” என்ற பெயர் ஏற்பட்டது. தமிழில் “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” எனப்பாடுகிறார். அவர்கள் தங்கியிருந்த ஊர், “ஓர் இரவு இருக்கை” எனப்பட்டு, தற்போது, ‘ஓரிக்கை’ என்று மருவியுள்ளது.‘ஒடுக்கத்துச் செறிவாய்’ திருப்புகழில் இந்நிகழ்ச்சியை அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார்.

“அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியில் ஆத்தமுற்றவன்
அலைக்குட் கட்செவி மேற் படுக்கையில் உறை மாயன்”
[சிறந்த தமிழ் வல்ல அறிஞர்களின் தமிழிலே வசப்பட்டு, அப்புலவர்களின் சாமர்த்தியமான இறுகிய பொருளில் இஷ்டம் கொண்டவன்; கடலில் ஆதிசேஷன் எனும் பாம்பின்மேல் படுக்கை
கொண்டிருக்கும் திருமால்].

‘நீருமென்பு’ எனத் தொடங்கும் பொதுப்பாடலில்,
“பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் மருகோனே”
– என்ற குறிப்பை அளித்துள்ளார்.

[இப்பூமியை உண்ட மாயன், புல்லாங் குழலை ஊதி மகிழ்பவன், முன்பு திருமழிசை ஆழ்வார் ஆகிய கவிஞர்களின் பாடலைக் கண்டு மகிழ்ந்து, அவர்கள் பின்பு
செல்பவனாகிய திருமாலின் மருகோனே”]
“திருவொன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின் தயிர் உண்டவன் எண்டிசை
திகழும் புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர் பின்
திரிகின்றவன்”
– என்பது ‘சருவும்படி’ எனத் தொடங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழில் வரும் குறிப்பு.

காளிதாசரால் ‘நகரேஷு காஞ்சி’ [நகரங்களுள் சிறந்தது காஞ்சி] என்றும் ‘கல்வியைக் கரையிலா காஞ்சி’ என்று அப்பர் பெருமானாலும் போற்றப்படும் காஞ்சி மாநகரிலிருந்து விடைபெறுகிறோம்.

சித்ரா மூர்த்தி

Tags : Thiruppuga Panchputat Thalang ,Kanchipuram area 16 ,Kachapalayam ,Thirumethali ,Thiruvefa ,Kachi Agambar ,Kanchi Kamatsi ,Kumarakotam ,Kanji Kachapeshwarar Temple ,Kanchipuram ,Rajapura ,Tenkodi ,West Rajaveti ,
× RELATED செல்வம் செழிக்கச் செய்வாள் கமல யோகினி