ஜோதிடத்தின் அடிப்படையான விதி, எந்த ஒரு பாவத்தையும் (bhavam) அதனுடைய விரய பாவமும் (12) அஷ்டம பாவமும் (8) எதிர்க்கும். குறிப்பிட்ட பாவத்தைச் செயல்பட விடாது தடுக்கும். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் பெரும்பாலும் ஒரு லக்னத்தின் விரய பாவத்தையும், அஷ்டம பாவத்தையும் மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஆனால், அப்படி அல்ல. ஒவ்வொரு பாவத்துக்கும் அதனுடைய அஷ்டம பாவத்தையும், விரய பாவத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் ஐந்தாம் பாவத்தின் விரய பாவமாக நான்காம் பாவம் அமைகிறது. நான்காம் பாவம் வலிமை பெற்று, ஐந்தாம் பாவம் வலிமை இழந்தால், ஐந்தாம் பாவத்தின் நற்பலன்கள் கிடைக்காமல் போய்விடும்.
ஐந்தாம் பாவம் வேலை இல்லாமல் சந்தோஷமாகச் சுற்றுவதைக் குறிக்கிறது. ஆனால், நான்காம் பாவம் அதற்கு 12 ஆம் பாவமாக அமைந்து வலிமை பெற்று விட்டால், அவர்கள் நினைத்தாலும் கூட ஊர் சுற்ற முடியாது. வேலை வேலை என்று காலம் முழுக்க வேலையிலேயே கழிப்பார்கள்.ஒரு மேஷ லக்ன ஜாதகம். நான்காம் பாவத்திற்குரிய சந்திரன் பன்னிரண்டாம் பாவத்தில் அதாவது மீனத்தில் ரேவதி நட்சத்திரத்தில் அமர்ந்து விட்டால் என்ன பலன் என்று யோசித்துப் பாருங்கள். பொதுவாக மேஷத்திற்கு ஆகாத கிரகம் புதன். மூன்று ஆறுக்கு உரியவர். அவருடைய நட்சத்திரத்திலே நான்காம் வீட்டு அதிபதி சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் போய் அமர்ந்து விட்டால் நான்காம் பாவத்தினுடைய காரியங்கள் பன்னிரண்டாம் பாவத்தின் தன்மையோடு செயல்பட ஆரம்பிக்கும்.
நான்காம் பாவம் வீடு, தாய், மன அமைதி, சொத்து இவற்றைக் குறிப்பது.பன்னிரண்டாம் பாவம் செலவு, வெளிநாடு, தனிமை, துறவு, நித்திரை, மருத்துவமனையில் இருத்தல் முதலிய விஷயங்களைக் குறிப்பது.இந்த அமைப்பு பாதிப்புடைய அமைப்பாக (negative) இருந்தால், சொத்து கிடைப்பதில் தகராறு இருக்கும். ஒரே வீட்டில் வசிக்காமல் வீடு மாறி வீடு மாறி வாழ்வார்கள். “சார், இது எனக்கு 12 வது வீடு” என்பார்கள். நிலம் தொடர்பான பிரச்னைகள் வழக்குகள் செலவுகள் இருக்கும். தாயின் உடல்நிலை பிரச்னையாக இருக்கும் அல்லது தாயின் உடல் நிலையைக் கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். சிலருக்குத் தாயைப் பிரிந்து வாழ வேண்டிய சூழலும் இருக்கும். என்னதான் முயன்றாலும் சுகமாகத் தூங்கலாம் என்றால் முடியாது.
ஆனால், இதே அமைப்பு சுப பலத்தோடு (POSITIVE) அமைந்துவிட்டால், அவர்கள் உள்ளூரில் சொத்துக்கள் வாங்க மாட்டார்களே தவிர, வெளிநாட்டுச் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சொந்த ஊரை விட்டு வெகு தூரத்தில் சென்று வாழ்வார்கள். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்தாலும் பின்னால் சொந்த வீடு வாங்கும் யோகமும் ஏற்படும்.ஒரு கும்ப லக்கின ஜாதகம். நான்காம் வீட்டுக்குரிய சுக்கிரன் பன்னிரண்டாம் வீட்டில் மகரத்தில் இருக்கிறார். ஜாதகர் கல்லூரி வாழ்க்கையில், தாயை விட்டுப் பிரிந்து வேறு ஊருக்குச் சென்றவர். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஒரு வருடம் கூட தாயாரோடு இருக்க முடியவில்லை. தாயார் கடைசி ஒரு சில நாள்கள் மட்டுமே ஜாதகரோடு இருந்தார். காரணம், நான்காம் பாவத்தில் விரய பாவத் தொடர்பு. (4, 12) இதில் இன்னொரு முக்கியமான குறிப்பு உண்டு. கும்ப லக்னத்திற்கு ரிஷப லக்கினம் (4) தாயாரின் லக்னமாக வரும். தாயாரின் லக்னாதிபதி, ரிஷப லக்னத்திற்கு ஆறுக்கு உடையவராகவும் மாறி, அவர் ரிஷப லக்னத்திற்கு ஒன்பதாம் இடமாகிய மகரத்தில் (ரிஷபத்துக்கு பாதகம்) இருந்தார்.
இந்த கணக்குப்படி பார்த்தாலும், ஜாதகரின் தந்தை, அதாவது ஒன்பதாம் இடத்திற்கு உரிய அதே சுக்கிரன், தாயாரின் ஸ்தானத்திற்கு பாதக ஸ்தானமாகவும்(9), ஜாதகருக்கு விரய ஸ்தானம்(12) ஆகவும் அமைந்த மகரத்தில் சூரியனின் உத்திராடத்தில் இருந்ததால், ஜாதகர் இளமையிலேயே தந்தையையும், ஜாதகரின் தாயார் கணவரையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. இதில் இன்னும் ஒரு குறிப்பு. ஜாதகரின் 9க்குரிய சுக்கிரன் பாதகாதியாகிய சூரியனின் உத்திராடத்தில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு ஜாதகத்தின் தசா புத்திகளும் கோள் சாரமும் துணை நின்றன என்பது வேறு விஷயம். கோள் நிலைகள் சம்பவம் நடக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுமே தவிர, சம்பவத்தின் காலத்தை உறுதி செய்வது, தசாபுத்திகளும் கோள்சாரமும் என்பதை மறந்து விடக்கூடாது.
அதனால்தான் சில பாதகமான அமைப்புக்கள் ஜாதகத்தில் இருந்தாலும், தசா புத்தியும் கோள் சாரமும் இணையாததால் , அந்தப் பாதகமான அமைப்பு கடைசி வரை நடக்காமலே போய்விடும். அதைப்போலத்தான் சுக அமைப்புகளும்.ஜோதிடத்தில் நீங்கள் ஒரு கணக்கு போடும் பொழுது, அதோடு பின்னிப் பிணைந்து மற்ற மற்ற கணக்குகளும் தானாக வந்துவிடும். இன்னும் நுணுக்கமாகக் கவனித்தால், தாயார் ரிஷப லக்னம் என்று சொன்னேன். ரிஷப லக்னத்திற்கு ஏழாவது ராசி விருச்சிகம். அதாவது கணவரைக் குறிப்பது. அதனுடைய மூன்றாவது ராசி மகரம். கணவருக்கு விரயாதிபதி சுக்கிரன் கணவரின் விருச்சிகத்திற்கு மூன்றாம் இடத்தில், (எட்டுக்கு எட்டாம் இடம்) விருச்சிகத்துக்கு கர்மாதிபதியாகிய சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் அமர்ந்து கணவருக்குப் பாதகத்தைச் செய்தது. அதாவது ஜாதகரின் தந்தையாருக்குப் பாதகத்தைச் செய்கிறது.ஜாதகத்தில் ஒரேவிதமான கணக்குகள் வேலை செய்வதில்லை. வெவ்வேறு கணக்குகளும் போட்டுப் பார்க்க வேண்டும்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது. நான்காம் பாவம் என்பது சுகஸ்தானம். ஆனால் நான்காம் பாவம் பாக்கியஸ்தானத்துக்கு எட்டாம் பாவமாக அமையும். பாக்கிய ஸ்தானம் வலுவிழந்து விட்டாலும் நான்காம் பாவத்தின் சுகம் கெடும். பூர்வீகச் பிரச்னைகள் தலை எடுக்கும்.இன்னொரு கும்ப லக்கின ஜாதகத்தைச் சொல்லுகின்றேன். நான்காம் வீட்டுச் சுக்கிரன் பதினோராம் வீடாகிய தனுசு ராசியில், சுக்கிரனுடைய பூராட நட்சத்திரத்தில் இருக்கிறார். சுய நட்சத்திரத்தில் இருப்பதால் அவருக்கு வலிமை அதிகம். அடுத்தது ஜாதகரின் லாப ஸ்தானத்தில் இருக்கிறார்.ஜாதகர் சிறுவயது முதலே தாயாரோடு இருக்கிறார். இன்றைக்கு திருமணமாகி குழந்தைகளோடு இருக்கும் பொழுதும், அவருக்குத் துணையாக அவருடைய வீட்டிலேயே தாயார் இருக்கிறார். ஆரோக்கியமாகவும் இருக்கிறார். காரணம் தாயாருக்கு ஆறாம் வீட்டுக்குரிய சுக்கிரன் எட்டில் மறைந்ததால், கெட்டவன் கெட்டால் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல, பெரிய அளவில் உடல் பாதிப்புகள் இல்லை.
நான்காம் வீடு சொந்த வீடுகளைக் குறிக்கும். ஜாதகர் முக்கியமான இடத்தில் மதிப்புள்ள பெரிய ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகின்றார். நான்காம் வீடு வாகனத்தையும் குறிக்கும். விலை உயர்ந்த வாகனத்தையும் வைத்திருக்கிறார்.ஆனால், அதேநேரம், சுகஸ்தானத்திற்கு எட்டாவது இடமாக தனுசு அமைந்திருப்பதால், உழைப்பு அதிகம். ஓய்வு இல்லை பம்பரம் போல் சுழன்று கொண்டே இருப்பார்.ஒரே விஷயம் (நான்காம் பாவம்) பல கோணங்களில் எப்படி வேலை பார்க்கிறது, பாருங்கள்.
