×

விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் காதல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை

*காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சோகம்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே குடும்பத் தகராறில் காதல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே சோழகனூரை சேர்ந்தவர் சக்திபரதன்(26). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரும் லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி(23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது பிரதாப்(4), இனியா(2) என ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே சக்திபரதன் அவ்வப்போது குடிபோதையில் வீட்டிற்கு வருவாராம். இதனால் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திபரதன் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டு ராஜகுமாரி தனது பிள்ளைகளுடன் தாய்வீட்டிற்கு கோபித்துகொண்டு சென்றாராம். சில நாட்களில் அவரை சமாதானப்படுத்திய சக்திபரதன் வீட்டிற்கு அழைத்துவந்து குடும்பம் நடத்தி வந்துள்ளாார்.

இதனிடையே மீண்டும் அவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பால்வியாபாரத்திற்கு சக்திபரதன் சென்றுள்ளார். பிள்ளைகள் பள்ளிக்கும், அங்கன்வாடிக்கும் சென்றுவிட்டனர்.

அப்போது பால்வியாபாரம் முடித்துவிட்டு சக்திபரதன் வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜகுமாரி தனது வீட்டின் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சக்திபரதனும் அவரை காப்பாற்ற 100 அடி ஆழ கிணற்றில் குதித்துள்ளார்.

ஆனால், நீச்சல் தெரியாததால் அவரும் மனைவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு ெசன்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராஜகுமாரியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் சக்திபரதன் உடலை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

குடும்பத் தகராறில் கணவன், மனைவி உயிரிழந்த நிலையில் பெற்றோரை இழந்து ஆதரவின்றி குழந்தைகள் பாரிதாபத்திற்குள்ளாகியுள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து காணை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரவு 7 மணியளவில் சக்திபரதன் உடலை தீயணைப்பு துறையினரால் மீட்க்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Viluppuram ,Chozhaganur ,
× RELATED திருச்சியில் இன்று மாலை கோலாகல விழா; 5...