மதுரை, மார்ச் 11: மதுரையில் 396 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை, மேற்குத்தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.62 கோடியே 68 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 9 தளங்களுடன் 396 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவற்றை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் 200 பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
