×

சாய ஆலைகள் முடங்கும்

 

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க தலைவர் காந்திராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணிகளுக்கு சாயமிட கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் வரை உயர்த்தி கட்டணம் நிர்ணயம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சங்க தலைவர் காந்திராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதனால், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10, 15, 20 ரூபாய் என நிறங்கள் அடிப்படையில் கட்டண உயர்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னலாடை நிறுவனங்கள் இதற்கு உதவிசெய்ய வேண்டும்.

இல்லையெனில், சாய ஆலை நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். சாயமிட தேவையான மூலப்பொருட்களான சிலிண்டர் கிலோ ரூ.60 ல் இருந்து ரூ.104 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெராக்ஸைடு ரூ.26ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. அசிடிட்டிக் ஆசிட் 46 ரூபாயில் இருந்து 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இப்படி மூலப்பொருட்கள் அனைத்தும் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.

எனவே, சாயமிட கிலோவுக்கு 60 ரூபாய் பெறப்பட்ட லேசான நிற வகைக்கு 70 ரூபாயும், 80 ரூபாய் பெறப்பட்ட இடை நிறத்திற்கு 95 ரூபாயும், 100 ரூபாய் பெறப்பட்ட அடர் நிறங்களுக்கு 120 ரூபாய் என கட்டணம் உயர்த்தி நிர்ணயம் செய்துள்ளோம். மேலும் இந்த போர் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் துணிகளுக்கு தேவையான சாயங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பெரும்பாலான சாயலைகள் தங்களது பணிகளை நிறுத்தவேண்டிய சூழல் உருவாகும். இதனால், பின்னலாடை ஏற்றுமதி வெகுவாக பாதிக்கும்.

தற்போதைய சூழலில் திருப்பூரில் இயங்கி வரும் 80 சதவீத சாய ஆலைகளில் அடுத்து வரும் 10 முதல் 15 நாட்களுக்கான சாயங்கள் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, போர் பதற்றங்கள் உடனடியாக முடிவுக்கு வந்தால் மட்டுமே சாய ஆலைகளை தொடர்ந்து இயக்க முடியும். போர் பதற்றம் தொடர்ந்து நீடித்தால் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு முழுமையாக சாய ஆலயங்கள் முடங்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dyeing mills ,Dyeing Mill Owners Association ,Rayapuram ,Tiruppur ,Gandhirajan ,Ponnusamy ,treasurer ,Matheswaran ,
× RELATED கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி...