சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய வரலாற்றில் முதல் முறையாக காஸ் சிலிண்டர் விலை ரூ.2ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ60ம், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.114.5ம் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடால் இந்திய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்து, இதுவரை எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்கவில்லை. தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இது தொடர்பாக எங்களைப் போல கண்டிக்காவிட்டாலும், கோரிக்கையாவது பழனிசாமி வைக்கலாமே? காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் அல்லது ஒன்றிய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லக்கூட அவருக்கு மனம் வரவில்லை. அவர் இப்படி மவுனமாக இருப்பதற்கு காரணம் என்ன?. அவர் மவுனத்தை கலைக்க வேண்டும். இதை மோடி அரசு சரி செய்ய வேண்டும். 60 ரூபாய் சிலிண்டர் விலை ஏற்றியதை குறைக்க வேண்டும் என சொல்லி இருக்கலாம். ஏன் இதுகுறித்து பேசாமல் மவுனமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி? மோடி கோபித்துக் கொள்வார் என அமைதியாக இருக்கிறாரா?.
பெட்ரோலியத் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். பெட்ரோலியத் துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் தமிழக அரசு இதுகுறித்து விவாதித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஒன்றிய பட்ஜெட்டிலும் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. எனவே இந்த விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
