- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ஆர்.என்.ரவி லைனிச்சி
- சென்னை
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- ஆளுநர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மேற்கு வங்கம்
- ஆளுநர் ஆர் என் ரவி
- ஆளுநரின் வீடு
சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பில் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.
அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு – உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லையிலும் கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் பகுதிகளுக்கும் சென்றேன். நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்திருந்தது.
தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கிறார்கள். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகிறார்கள். ’செயற்கை நுண்ணறிவை’ இயற்கையான செறிவோடு கையாளுகிறார்கள். அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்துகொண்டேபோகின்றன.
இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா – என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா! அன்பானவர்களே! அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
