×

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.78.41 கோடியில் சமத்துவபுரம், அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.78 கோடியே 41 லட்சம் செலவில் சமத்துவபுரம், அலுவலக கட்டிடங்கள், பொது சுகாதார கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், பள்ளி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி கொத்தக்கோட்டை, வள்ளிமாடன்வலசையில் ரூ.7 கோடியே 91 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், நாமக்கல் மாவட்டம் – மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், வையப்பமலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சாமி கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோயிலாகும். பக்தர்கள் எளிதாக மலைமேல் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்திட வசதியாக 850 மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பான புதிய மலைச்சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதி ஆகியவை ரூ.4 கோடியே 56 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முதல்வர் திறந்து வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும், தெள்ளார் ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 36 லட்சம் செலவிலும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சத்து செலவிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 56 லட்சத்து 90 ஆயிரம் செலவிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும் மற்றும் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் ரூ.5 கோடியே 90 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஊரக பகுதிகளில் பொது சுகாதரத்தினை மேம்படுத்திடும் விதமாக தேனி மாவட்டம் – பெரியகுளம் ஒன்றியம், இ.புதுப்பட்டி ஊராட்சி, உத்தமபாளையம் ஒன்றியம், கோம்பை ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) ஒன்றியம், ராமபட்டினம் ஊராட்சி, சிவகங்கை ஒன்றியம் திடக்கோட்டை ஊராட்சி, புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை ஊராட்சி, எம்.குலவாய்பட்டி ஊராட்சி, திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம், புத்தாநத்தம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 7 பொதுசுகாதார கட்டிடங்கள்;

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியம், டொம்புச்செரி ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் கம்மாலப்பட்டி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சி, மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் செக்கானூரணி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள 4 சமுதாயக்கூட கட்டிடங்கள் என மொத்தம் ரூ.78 கோடியே 41 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆணையர் பொன்னையா கூடுதல் ஆணையர் லலித் ஆதித்யா நீலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Samathuvapuram ,Rural Development and Panchayat Department ,Chennai ,Ramanathapuram district ,Thirupullani Kothakottai ,
× RELATED புதுச்சேரியில் நள்ளிரவு கேட் ஏறி...