வர்த்தக சிலிண்டரை தொடர்ந்து வீட்டு சமையல் எரிவாயு தட்டுப்பாடு: பதுக்கல் – கள்ளசந்தை விற்பனை தடுக்க கட்டுப்பாடு

சென்னை: வர்த்தக சிலிண்டரை தொடர்ந்து வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பதுக்கல் – கள்ள சந்தையில் விற்பனை போன்றவைகளை தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளன.

ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 7ம் தேதி வீட்டு எரியாவு சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தன. அதன்படி வீட்டு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928க்கும், வர்த்தக சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,044க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வர்த்தக சிலிண்டரை பொறுத்தவரை ரெஸ்டாரண்ட், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரி, ஸ்வீட் கடைகள், கேட்டரிங் சேவை, தங்கம் மற்றும் வெள்ளி செய்யும் பட்டறைகள், டைல்ஸ் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விலையேற்றத்தால் வர்த்தக சிலிண்டர் கடந்த இரண்டு நாட்களாக தட்டுப்பாடு நிலவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் அன்றாட வாழ்வியலில் சமையல் எரிவாயு மிக முக்கியமான அங்கமாக இருந்து வருகின்றன. தற்போது விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திணறி வரும் குடும்பங்களுக்கு, இது ”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” போல் அமைந்துள்ளது. மாதத்தின் தொடக்கத்திலேயே எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், பால், மளிகை மற்றும் காய்கறிச் செலவுகளைச் சுருக்க வேண்டிய நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், விலையேற்றம் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டு முன்பதிவுகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக திடீரென உயர்ந்தன.

இதனால் ஒருவர் 21 நாட்களுக்குள் சிலிண்டரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என விதிமுறை இருந்ததை திருத்தியமைக்கப்பட்டு 25 நாட்களாக அதனை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதாவது ஒரு சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட பிறகு அடுத்த சிலிண்டரை 25 நாட்களுக்கு பிறகு பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், புவிசார் அரசியல் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதாரத் தடைகளைப் பொறுத்து, மலிவான விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து கொள்முதல் தொடரும் என்றும் தற்போது தட்டுப்பாடு என்பது இல்லை; இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலிண்டர் விலையேற்றம் காரணமாக கடுமையான பொருளாதார சிக்கல்களும், விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்களின் டீலர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஓசி எண்ணெய் நிறுவனத்தின் டீலர்கள் சங்கத்தினர் கூறியதாவது:
எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்தும்போது, விநியோகஸ்தர்கள் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய முன்பணத் தொகை அதிகரிக்கிறது. விலை உயர்வால் ஒவ்வொரு லோடு சிலிண்டருக்கும் நாங்கள் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அதற்கேற்ற லாப வரம்பு எங்களுக்குக் கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளதால் தற்போது விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது. ஊழியர்களின் ஊதியம், வாகனப் பராமரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் போன்ற நிர்வாகச் செலவுகளைச் ஈடுகட்ட, டீலர்களுக்கான கமிஷன் தொகையை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறோம். குறிப்பாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறுதொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இது சந்தையில் சிலிண்டர்களுக்கான தேவையைக் குறைக்கக்கூடும் என அஞ்சுகிறோம். சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க எண்ணெய் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. முன்பதிவு கால இடைவெளியை அதிகரித்துள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, ஒன்றிய அரசு இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

  • ஒன்றிய பெட்ரோலிய தகவல் அமைச்சகத்தின் தரவின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2.41 கோடி பேர் வீட்டு சிலிண்டர் உபயோக வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1.36 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
  • பிரதமரின் உஜ்வாலா யோஜனா ஏழை எளிய மக்களுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 35 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சென்னை மண்டலத்தில் (சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள்) உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ நுகர்வோரின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகம். இது தவிர பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
  • ஒன்றிய அரசின் தரவுகளின்படி, சென்னையில் உள்ள அனைத்து வீடுகளும் 100 சதவீத வீடுகளில் ஏதேனும் ஒரு வகை எரிவாயு இணைப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நுகர்வோர்கள் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் சிலிண்டர்களை மறு நிரப்பலுக்கு (ரீஃப்பில்) முன்பதிவு செய்கின்றனர்.
  • சென்னையை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை சிலிண்டர் முன்பதிவுகள் நடைபெறுகின்றன. பண்டிகைக் காலங்கள் அல்லது தட்டுப்பாடு நிலவும் காலங்களில் இந்த எண்ணிக்கை 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: