தென்காசியில் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் இளம்பெண்ணை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திய வாலிபர்

தென்காசி,மார்ச் 10: தென்காசியில் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை கத்திரிக்கோலால் வாலிபர் சரமாரியாக குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மலையான் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகள் சொர்ணம் (28). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தானவர். தற்போது கடையநல்லூர் அடுத்த ஆய்க்குடி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது உறவினரான பாளையை சேர்ந்த பழக்கடை ஊழியரான உச்சிமாகாளி மகன் சுரேஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு சொர்ணம் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் நேற்று சொர்ணம் வேலை செய்யும் தனியார் பள்ளி வாசல் முன்பு காத்திருந்தார். சொர்ணம் தனியார் பள்ளியை விட்டு வெளியே வந்த போது சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் இளம்பெண்ணின் கழுத்து முதுகு பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் படுகாயமடைந்த சொர்ணத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசியில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணை கத்திரிக்கோலால் வாலிபர் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: