தூத்துக்குடி, மார்ச் 10: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் அகன்ற திரையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒளிபரப்பப்பட்டது. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, எஸ்பி மதன் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி, நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று 3வது முறையாக டி20 சாம்பியன் ஆனது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப்போட்டியை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரையில் அகன்ற திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, எஸ்பி மதன், ஐஏஎஸ் அதிகாரிகளான கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா, பயிற்சி சப்-கலெக்டர்கள் புவனேஸ்ராம், மகேந்திரன், கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் அமர்ந்திருந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். இதுகுறித்து மேயர் ஜெகன்பெரியசாமி கூறுகையில், கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த கிரிக்கெட் திருவிழாவை அகன்ற திரையில் காண ஏற்பாடு செய்தோம். அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டவர்களோடு நாங்களும் மகிழ்ச்சியாக பார்த்தோம். இந்தியா வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக அமைந்தது, என்றார். அப்போது மாநகர திமுக மீனவரணி அமைப்பாளர் டேனியல், கவுன்சிலர்கள் பவானி, வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, மெட்டில்டா, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மின்வாரிய தொமுச தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
